விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்.. பூமிக்கு திரும்புவதில் தாமதம்! சொதப்பிய எலான் மஸ்க்
நியூயார்க்: கடந்த ஆண்டு விண்வெளிக்கு சென்றிருந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவரை அழைத்து வர புறப்பட உள்ள எலான் மஸ்கின் ராக்கெட், புறப்படுவதற்கு தாமதமாகும் என்பதால், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்தான் சுனிதா வில்லியம்ஸ். பெண்ணாக இருந்தாலும், ஆண்களை விட குறிப்பிடத்தக்க அளவில் பல்வேறு ஆய்வுகளை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார். எனவே அமெரிக்கா இவரை பலமுறை விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறது. அப்படித்தான் இந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் 'ஸ்டார்லைனர்' விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சுனிதாவின் பயணம்: ஸ்டார்லைனர் என்பது போயிங் நிறுவனத்தின் விண்கலமாகும். போயிங் நிறுவனம் விமான தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் வகையில் ராக்கெட் எதையும் வடிவமைத்ததில்லை. 'ஸ்டார்லைனர்தான்' போயிங்கின் முதல் ஸ்பேஸ்ஷிப். எனவே இது புறப்படுவதில் ஏகப்பட்ட பிரச்சனை எழுந்தது. ஒருமுறை, இருமுறை அல்ல பலமுறை இதன் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக ஜூன் 5ம் தேதி புறப்பட்டது.
இரண்டு பேர்: பயணத்தில் சுனிதா மட்டுமல்லாது, புட்ச் வில்மோர் என்கிற மற்றொரு விண்வெளி வீரரும் உடன் இருந்தார். இருவரும் ஒரு வாரம் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்ய வெண்டும். இந்த ஆய்வு சிறிய காலத்தில் நடக்கும் என்பதாக இருந்தாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்து முடிந்தது. ஆனால் திரும்பி வருவதற்கு முயன்றபோதுதான் ஸ்டார்லைனரில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு: த்ரஸ்டர் எனப்படும் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதை சுனிதாவும், வில்மோரும் கண்டுபிடித்தனர். இது சரி செய்யப்படாவிட்டால் பத்திரமாக பூமியில் தரையிறங்க முடியாமல் போய்விடும். எனவே மற்ற எல்லா வேலையை விட முக்கியமானது இந்த த்ரஸ்டரை சரி செய்வதுதான். எனவே, அதற்கான பணியில் இருவரும் ஈடுபட்டனர். முடிந்தவரை முயன்று பார்த்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. நாட்கள் சென்றுக்கொண்டே இருந்தன.
எலான் மஸ்க்கின் உதவி: இப்போது இவர்களுக்கு இருப்பது இரண்டே ஆப்ஷன்தான். ஒன்று ஸ்டார்லைனரில் பூமிக்கு திரும்புவது. இரண்டாவது, அடுத்த விண்கலம் வரும் வரை விண்வெளியிலேயே தங்கியிருப்பது. இவர்கள் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தார்கள். எனவே ஆள் இல்லாமல் ஸ்டார்லைனர் பூமிக்கு பத்திரமாக திரும்பியிருந்தது. இப்போது விண்வெளியில் சிக்கியிருப்பவர்களை அழைத்துவர எலான் மஸ்க்கின் உதவியை நாசா நாடியது.
எலான் மஸ்க் க்ரூ டிராகன் என்கிற பிரமாண்டமான விண்கலத்தை வைத்திருக்கிறார். மட்டுமல்லாது இதற்கு முன்னர் இவர் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு சென்ற அனுபவத்தையும் கொண்டிருக்கிறார். எனவே, அவர்தான் சரியான ஆள் என்று நாசா நம்பியது.
நாசாவும், எலான் மஸ்க்கும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 2025 பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர வேண்டும். ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தற்போது கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. க்ரு டிராகன் விண்கலம் விண்வெளியில் பாய சற்று கூடுதல் வேலைகளை செய்ய உள்ளதாகவும், எனவே மார்ச் இறுதியில்தான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஆக மார்ச் இறுதிவரை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications