இனி நடப்பதை பாருங்கள்.. இந்தியா, சீனாவிற்கு ஒரே நேரத்தில்.. கடுமையான எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
நியூயார்க்: அமெரிக்காவிற்கு வரி மூலமாக அழுத்தம் கொடுக்கும் நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பை மேற்கொள்ள போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த எச்சரிக்கையை டிரம்ப் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை அதிக வரி விதிக்கும் நாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் மீது நாங்கள் கூடுதல் வரிகளை விதிக்கப் போகிறோம், இந்த நாடுகள் பொதுவாக எங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகள்.

அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்றாலும்.. தங்களுக்கு தேவையான, தங்கள் நாட்டிற்கு தேவையான செயலில் ஈடுபடுகிறார்கள். பிற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்து அதன் மூலம் வரும் வருவாயை தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அப்படித்தான் நாங்களும்.. பிற நாடுகளுக்கு முக்கியமாக எங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடுகளுக்கு நாங்களும் கூடுதல் வரிகளை விதிப்போம்.
மற்ற நாடுகள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். சீனா ஒரு மிகப்பெரிய நாடு.. அவர்கள் மற்ற நாடுகள் மீது மிக மிக அதிக அளவில் வரியை விதிக்கிறார்கள். இந்தியா, பிரேசில் மற்றும் பல நாடுகள் இதேபோல் கூடுதல் வரியை விதிக்கிறார்கள். எனவே அமெரிக்காவை முதலிடத்தில் வைக்க நாமும் இனி வரி விதிக்க வேண்டும்.
பிளான் என்ன?
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி போடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான டீம் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது போக டாலர் வர்த்தகம் தாண்டி, இந்தியாவின் வரி விதிப்பு முறையை காரணம் காட்டி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது 20% கூடுதல் வரியை விதிக்கவும் டிரம்ப் முயல்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ மீது அவர் விதிக்கும் 20% வரி இந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. மேலும் சீனா மீதான வரியை அடுத்த வாரம் அறிவிப்பார். அதன்பின் இந்தியா மீதான வரியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்தியா மாஸ்டர் பிளான்:
இதை சமாளிக்க இந்தியா பின்வரும் அஸ்திரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம் . அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம். அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம்.
சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள் , எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது. ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
அதோடு டாலர் வர்த்தகத்தை விட்டு மாற மாட்டோம் என்று இந்தியா மீண்டும் உறுதி அளிக்கும் என்கிறார்கள் . ஏற்கனவே டாலரில் வர்த்தகம் செய்யவே விரும்புவதாகவும்.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதில் ஆதரவு இல்லை என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பி உள்ளதாம். அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்காவிற்கு சாதகமாக மாறி உள்ளது. டாலர் வர்த்தகத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. ஆனாலும் பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தியா மீண்டும் அமெரிக்காவை சமாதானம் செய்யும் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications