வட்டி விகிதத்தை 2வது முறையாக குறைத்த அமெரிக்கா.. மீண்டும் அதிரடியாக உயரப்போகும் தங்கம் விலை
நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. நேற்று நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. வட்டி விகிதங்கள் குறைப்பு அறிவிக்கும் போது அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே குறையும். இதனால் டாலரின் மதிப்பு பலவீனமடையும். இதனால் தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. நேற்று நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குறைப்புக்குப் பிறகு, ஃபெடரல் நிதிகளுக்கான இலக்கு விகிதம் 3.75% முதல் 4.00% ஆக உள்ளது. இது இந்த ஆண்டில் (2025) ஃபெடரல் ரிசர்வ் மேற்கொள்ளும் இரண்டாவது வட்டி விகிதக் குறைப்பாகும். இதற்கு முன் செப்டம்பர் 2025-லும் வட்டி குறைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், பலவீனமடைந்து வரும் வேலைவாய்ப்புச் சந்தை மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டும் இந்தக் குறைப்பு எடுக்கப்பட்டிருக்றிது. எனினும், அடுத்த வட்டி குறைப்புக்கான முடிவுகள் எதுவும் நிச்சயமாக இல்லை என்றும் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுவாக அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் போது, அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே குறைந்து போகும். இதனால் டாலரின் மதிப்பு பலவீனமடைந்துவிடுவதும் இயல்பானது. அதேநேரம் தங்கம் பொதுவாக அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யப்படுகிறது. எனவே டாலரின் மதிப்பு குறையும் போது, மற்ற நாடுகளின் நாணயங்களைக் கொண்டு தங்கத்தை வாங்குவது மலிவாகும். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்துவிடுவது வாடிக்கையாகும்.
அதேபோல் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எப்போது எடுக்கும் என்றால், பொருளாதாரத்தில் உள்ள மந்தநிலை அல்லது நிச்சயமற்ற தன்மை காரணமாகவே எடுக்கும். அப்படியான சூழல் தான் இப்போது நிலவுகிறது.. அதனால் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டியை குறைத்துள்ளது. இப்படியா ஒரு சூழ்நிலைகளில், முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பிற அபாயகரமான சொத்துக்களை விட்டு வெளியேறி, தங்கம் போன்ற பாதுகாப்பான புகலிடச் சொத்துக்களில் முதலீடு செய்யவே விரும்புவார்கள். இது தங்கத்தின் தேவையை அதிகரித்து, விலையை உயர்த்தும். எனவே தங்கம் விலை மீண்டும் வழக்கம் போல் உயர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் பொதுவாக இப்படியான சூழலில் முதலீட்டை திரும்ப பெற காரணமும் இருக்கிறது. ஏனெனில் வட்டி விகிதங்கள் குறையும்போது, அரசாங்கப் பத்திரங்கள் போன்ற வட்டி தரும் முதலீடுகளின் வருமானம் குறைந்துவிடும். அதேநேரம் தங்கம் எந்த வட்டியையும் தராது. ஆனால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது, வட்டி தராத தங்கத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் நஷ்டம் குறைவு ஆகும். எனவே தான் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை ஆபத்தான காலத்தில் விருப்பமாக வைத்துள்ளார்கள். எனவே மீண்டும் தங்கம் விலை உயரவே அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications