ஆட்டம் கண்ட உலக பொருளாதாரம்.. அத்தனையும் செய்துவிட்டு கூலாக டிரம்ப் கொடுத்த பதிலை பாருங்க
நியூயார்க்: டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்க கூடிய நிலையில், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக பேசியிருக்கும் டிரம்ப், எண்ணெய் விலைகள் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் பணவீக்கம் எதுவும் இல்லை என்றும் பேசியிருக்கிறார். பொருளாதார நிபுணர்கள் மந்த நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்து உள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக வரி விதிப்பதாகவும், அமெரிக்காவும் அதே அளவுக்கு வரியை விதிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல, இந்தியா மீது 26 சதவீத வரியும், சீனா மீது 34 சதவீத பரஸ்பர வரியையும் டிரம்ப் அறிவித்தார்.

சந்தைகள் கடும் வீழ்ச்சி
இப்படி பல்வேறு நாடுகளுக்கு டிரம்ப் வரியை விதித்த நிலையில் வரி விதிப்பு காரணமாக உலகளாவிய சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. ஆனாலும் டிரம்ப் தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். டிரம்பின் வரி விதிப்பு காரணமாக அமெரிக்க பங்குச்சந்தையும் தப்ப வில்லை. அமெரிக்க பங்குச்சந்தை மட்டும் இன்றி உலகம் முழுக்க பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளும் கடுமையாக வீழ்ச்சியை இன்று சந்தித்தன. இந்திய பங்குச்சந்தையையும் இது விட்டு வைக்கவில்லை.
பி.எஸ்.சி எனப்படும் மும்பை பங்குச்சந்தை 4 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதே போன்று தேசிய பங்குச்சந்தையான என்.எஸ்.சி. ஒரே நேரத்தில் 1000 புள்ளிகள் சரிந்தது. பங்குச்சந்தை திறந்த வெறும் 10 விநாடியில் இந்திய முதலீட்டாளர்கள் 20 லட்சம் கோடியை இழந்தனர். உலக பங்குச்சந்தையில் இந்த நாள் கறுப்பு தினமாக அமைந்து இருப்பதாக உலக வர்த்தக முதலீட்டாளர்கள் கூறினர்.
பிளாக் மண்டே
கடந்த 1987 ஆம் அண்டு அக்.19 ஆம் தேதி உலக பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்தது. அப்போது அமெரிக்க வங்கிகளின் வட்டி குறைப்பால் உலக பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. இதை 'பிளாக் மண்டே' என குறிப்பிடப்பட்ட நிலையில், 38 ஆண்டுகளுக்கு பிறகு பிளாக் மண்டே நிகழ்ந்து இருப்பதாக பங்குச்சந்தை வல்லுனர்களும் கூறி வருகிறார்கள்.
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகள் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும்.. பொருளாதார வளர்ச்சியைக் குறையும் என்ற அச்சத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள். உலக பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்த நிலையிலும் அமெரிக்காவில் பணவீக்கம் எதுவும் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.
கூலாக பேசிய டிரம்ப்
மேலும் முந்தைய அமெரிக்க தலைவர்களையும் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார். டிரம்ப் இது தொடர்பாக கூறுகையில், "எண்ணெய் விலை குறைந்துள்ளது. வட்டி விகிதம் குறைந்துள்ளது. உணவு விலை சரிந்துள்ளது. பணவீக்கம் எதுவும் இல்லை. நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அமெரிக்கா, விதிக்கப்பட்ட வரிகள் மூலம் பில்லியன் கணக்கான வருவாயை வாரத்திற்கு ஈட்டுகிறது.
பதிலடி வரி விதிக்க கூடாது என்ற எனது எச்சரிக்கையையும் மீறி, சீனா 34 சதவீதமாக வரியை உயர்த்தியிருக்கிறது" என்றார். முன்னதாக வரி விதிப்பு தொடர்பாக டிரம்ப் அளித்த மற்றொரு பேட்டியில் கூறியதாவது:- "சீனா, ஐரோப்பிய ஒன்றியங்கள் மற்றும் பல நாடுகளுடன் எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க ஒரே வழி அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது மட்டுமே.
ஒரு ஒப்பந்தமும் செய்ய மாட்டேன்
இவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஜோ பைடன் அதிபராக இருந்த பதவி காலத்தில் அமெரிக்கா மற்ற நாடுகளால் மோசமாக நடத்தப்பட்டது. இதற்கு அனுமதித்த முட்டாள்தனமான தலைமை நம்மிடம் இருந்தது. இதை நாங்கள் விரைவில் மாற்றப்போகிறோம். சில நேரங்களில் எதையாவது சரி செய்ய மருந்து எடுக்கவேண்டி இருக்கும். இவற்றை ஒரு அழகான விஷயமாக கருதுகிறேன். என்ன நடக்க போகிறது என்பதை என்னால் சொல்ல முடியாது.
நமது நாடு மிகவும் வலிமையானது. அமெரிக்காவிற்கான வரிகள் மிகவும் முக்கியமான விஷயம் என்பதை ஒருநாள் மக்கள் உணர்வார்கள். உலகத் தலைவர்களுடன் வரி விதிப்பு பிரச்சினை குறித்து விவாதித்தேன். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய துடிக்கிறார்கள். வர்த்தக பற்றாக்குறை தீர்க்கப்படாவிட்டால் மற்ற நாடுகளுடன் ஒரு ஒப்பந்தமும் செய்ய மாட்டேன்" என்றார்.
அமெரிக்காவில் மக்கள் போராட்டம்
இதற்கிடையெ, டிரம்பின் வரி விதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம் நடைபெற்றது. டொனால்டு ட்ரம்ப் எல்லை மீறி செயல்படுவதாக கூறி, வாஷிங்டன், நியூயார்க், ஹுஸ்டன், ப்ளோரிடா, கொலராடோ, லாஸ் ஏஞ்சல் உள்ளிட்ட இடங்களிலும் அமெரிக்க மக்கள் நேற்று முன் தினம் போரட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
டிரம்பின் செயலால் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், அவரின் செயல் சொந்த நாட்டு மக்களுக்கே பேரழிவை ஏற்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications