வர்த்தக போர்! அதலபாதாளத்திற்கு போகும் அமெரிக்க GDP.. வெளியான ஷாக் தகவல்கள்
நியூயார்க்: வர்த்தக போர் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் GDP வளர்ச்சி குறையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியான கணிப்புகள் தற்போது அவசர அவசரமாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அட்லான்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கி, காலண்டு GDP வளர்ச்சி விகிதத்தை குறைத்து வெளியிட்டிருக்கிறது. பெடரல் வங்கியே இப்படி அறிவிப்பை வெளியிட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

நம்மூரில் இருக்கும் ரிசர்வ் பேங்க் போல அமெரிக்காவில் 12 பெடரல் வங்கிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில மாகாணங்களுக்கு ஒரு வங்கி என மொத்தம் 12 இருக்கிறது. இதில் 6வது பெடரல் ரிசர்வ் மாவட்டத்திற்கான வங்கியாக 'Federal Reserve Bank of Atlanta' இருக்கிறது. இந்த வங்கி அமெரிக்காவின் காலாண்டு வளர்ச்சி குறித்து கடந்த பிப்ரவரி மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி வளர்ச்சி 3.9% ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று இந்த கணிப்பு திருத்தப்பட்டு வேறு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வளர்ச்சி 2.9% ஆகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது முந்தைய கணிப்பை விட 1% குறைத்து அறிவிப்பு வெளி வந்திருக்கிறது.
Federal Reserve Bank of Atlanta சார்பில் உருவாக்கப்பட்ட GDPNow என்கிற பொருளாதார கணிப்பு கருவி கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் அதிக அளவு பணத்தை செலவு செய்ய விரும்பவில்லை. பணம் செலவானால்தான் அது பொருளாதாரத்தை வளர்க்கும். ஆனால், வேலையின்மை, பிசினஸில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக பணம் செலவழிப்பது குறைந்திருக்கிறது. எனவே முதலீடுகளும் குறைந்துள்ளன. இவையெல்லாம் சேர்த்துதான் வளர்ச்சி அளவை குறைத்திருக்கின்றன.
இப்போது அமெரிக்காவில் தனியார் உள்நாட்டு முதலீடுகளும் குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இந்த முதலீடுகள் 4.1% முதல் 6.5% வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கணிப்பு தற்போது 3.0% முதல் 5.2% என மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
கனடாவுக்கும், மெக்சிகோவுக்கும், சீனாவுக்கும் போடப்பட்டிருக்கும் வரி காரணமாகவும் இந்த வளர்ச்சி குறியீடுகள் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்பிளாக கூறுவதெனில், டிரம்ப் தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்கிறார் என பொருளாதார ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்படியே போனால் அமெரிக்காவில் முதலீடுகள் குறைய தொடங்கிவிடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐரோப்பிய யூனியன், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 12 பெடரல் வங்கிகளில் அட்லாண்டா வங்கி மேற்குறிப்பிட்டவாறு கணிப்பை குறைத்திருக்கிறது. மற்ற வங்கிகளும் இதேபோல கணிப்பை மாற்றி அமைத்தால் நிச்சயம் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக அடி வாங்கும்.
இதை தவிர்க்க கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும். சீனாவுக்கு இல்லை என்றாலும் கூட, மற்ற இரண்டு நாடுகளுக்காவது செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications