நாடு விட்டு நாடு போய்.. வெனிசுலா அதிபரை சிறைபிடித்த டிரம்ப்! அவசரமாக கூடும் ஐநா பாதுகாப்பு கவுன்சில்
நியூயார்க்: அமெரிக்கா வெனிசுலாவில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பாதுகாப்பு கழகத்திலுள்ள ஒரு தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் கூட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்தது கொலம்பியா நாடாகும். 2026ஆம் ஆண்டின் முதல் நாளிலிருந்து, இரண்டு ஆண்டு காலத்திற்கு ஐநா பாதுகாப்பு கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ள கொலம்பியா, இந்த விவகாரத்தில் உடனடி ஆலோசனை அவசியம் என தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சீனாவும் ரஷ்யாவும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டலாம் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தெரெஸ் கலந்து கொண்டு நிலைமையை விளக்க வேண்டும் எனவும் கொலம்பியா குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வெனிசுலா பிரச்சினை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை. ஆனால் சமீபத்தில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள், கரீபியன் கடலில் நடந்த தாக்குதல்கள் போன்ற காரணங்களால் மீண்டும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த நடவடிக்கையை பாராட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், டிரம்பின் இந்த நடவடிக்கை "வரலாற்று சிறப்புமிக்கதும் துணிச்சலானதும்" என்று தெரிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் நீதி நோக்கி எடுத்த இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க இராணுவத்தினரின் வீரத்தையும் அவர் புகழ்ந்துள்ளார்.
இதே நேரத்தில், நியூயோர்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி வேறு கருத்தை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்ததாக டிரம்ப் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, நேரடியாகவே அவர் அதிபர் டிரம்பை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்ததாக கூறியுள்ளார்.
ஆட்சிமாற்றத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக நடப்பதற்கும் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அரசின் இந்த நடவடிக்கை, நியூயார்க் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கக் கூடாது என்பதே தனது முக்கிய கவலை என்று தெரிவித்தார். வெனிசுலா பிரச்சினை மீண்டும் சர்வதேச அரசியலில் தீவிரமாக பேசப்படும் நிலையில் உள்ள நிலையில், நடக்கவிருக்கு ஐநா பாதுகாப்பு கழக அவசரக் கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்படும் என்பது தற்போது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications