சாரி டைம் முடிஞ்சு போச்சு! இனி பேச்செல்லாம் இல்ல.. ஸ்ட்ரெய்ட்டா வீச்சு தான்! டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
நியூயார்க்: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரான் எங்களுடன் பேச விரும்புகிறார்கள்.. ஆனால் காலம் கடந்துவிட்டது என டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலால் தூதரக கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தாக்குதல் நேரத்தில் தூதரகம் காலியாக இருந்ததால் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதே போல், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள், மோதல் அதிகரிக்கும் அபாயத்தை அதிகமாக்கியுள்ளன.

இஸ்ரேல் ஈரான் போர்
மறுபுறம், ஈரான் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்ட தகவலின்படி, ஈரான் ஏவுகணை பெட்டா டிக்வா நகரை தாக்கியுள்ளது. இதில் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ரியாத் தூதரகம் தாக்குதல்
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி வெளியிட்ட அறிவிப்பில், டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது தெளிவில்லை என தெரிவித்துள்ளார். விமானப் பயணம் தடைபட்டுள்ளதால், அமெரிக்கர்கள் எகிப்தின் சினாய் தீபகற்பம் வழியாக வெளியேறலாம் என்றும் பேருந்து மூலம் அங்கு செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரிகளில் அவசரப் பணியில் இல்லாதவர்கள் அந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
இந்த சூழலில், ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் தனது ட்ருத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். "ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது இல்லாமல் போய்விட்டன. இப்போது அவர்கள் எங்களுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு பின்னர், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை அமெரிக்க அதிபர் மறுத்துள்ளார்.
மத்திய கிழக்கு பதற்றம்
இதற்கிடையில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபைக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரெனி, "தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது பயனுள்ளதாக இருக்குமா என்பதில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால், ஈரானின் பேச்சுவார்த்தை ஆர்வமும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு மற்றும் ஈரானின் பதிலடி நடவடிக்கைகள், நிலைமை விரைவில் சீராகும் வாய்ப்பை குறைத்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications