“இன்னைக்கு சம்பவம் இருக்கு..” மோடியை சந்திக்கும் முன் சூசகமாக பேசிய டிரம்ப்! விஷயம் இதுதான்
நியூயார்க்: இன்றிரவு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில், வரி குறித்து முக்கிய அறிவிப்பு கொஞ்ச நேரத்தில் வெளியாகும் என டிரம்ப் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
ஏற்கெனவே வரி விஷயத்தில் இவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலவும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், விடாப்பிடியாக மீண்டும் வரி திருத்தங்களை கொண்டுவருவேன் என்று பிடிவாதம் பிடித்து வருவது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

"TODAY IS THE BIG ONE: RECIPROCAL TARIFFS" என்று டிரம்ப் பதிவிட்டிருந்தார். இதில் RECIPROCAL TARIFFS பெரிய பிரச்சனையாக உருவெடுக்க இருக்கிறது. இந்தியாவில் அமெரிக்க ஆப்பிளுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது எனில், அமெரிக்காவில் இந்திய மாம்பழத்திற்கும் 5% வரி விதிக்கப்படும். அதாவது இரண்டு நாடுகளுக்கும் பொதுவான வரி என்பதைதான் RECIPROCAL TARIFFS என்று கூறுகிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்சமாக 10% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் 30 பொருட்களின் வரி விகிதங்கள் 2.5%, 5% மற்றும் 7.5% என வரி விதிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கு பெரிய நஷ்டமெல்லாம் வந்துவிடாது. ஏனெனில் இந்தியாவிடம் பொருளை விற்றுதான் அமெரிக்கா தனது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.
ஆனால், இந்தியாவுக்கு இந்த நெருக்கடி இருக்கிறது. ஏனெனில் இந்தியாவின் கரன்சி, டாலர் கிடையாது ரூபாய் நோட்டுக்கள்தான். சிம்பிளாக சொல்வதெனில், இந்தியாவுக்கு தேவையான பெட்ரோல் அரபு நாடுகளிலிருந்து வாங்குகிறோம். அமெரிக்க டாலரை கொடுத்தால்தான் பெட்ரோலை கொடுப்பார்கள். எனவே, நமக்கு டாலர் முக்கியம்.
டாலர் எப்படி கிடைக்கும்? இந்தியாவில் தயாரிக்கப்படும் துணி மணிகள், ரத்தின கற்கள் இப்படி பல சமாச்சாரங்கள் அமெரிக்காவில் விற்கப்படுகின்றன. அதன் மூலம் டாலர் கிடைக்கிறது. ஆனால், நாம் விதித்த 10% வரியை இந்த பொருட்களுக்கு RECIPROCAL TARIFFS என்கிற பெயரில் அமெரிக்கா விதித்தால் நம்முறை வியாபாரம் படுத்துவிடும். RECIPROCAL TARIFFS வரியால் அமெரிக்காவுக்கும் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது.
அதாவது, இந்தியாவில் சாம்சங் மொபைலை உற்பத்தி செய்ய ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.12,000 சம்பளம் கொடுத்தால் போதும். ஊழியர்களை மனிதாபிமானமே இல்லாமல் பிழிந்து எடுத்துவிடலாம். ஆனால், அமெரிக்காவில் ஒரு ஊழியருக்கு ரூ1.09 லட்சம் கொடுக்க வேண்டும். எனவே சாம்சங் நிறுவனம் காஞ்சிபுரத்தில் கடையை விரித்து, நம்மூர் இளைஞர்கள் தலையில் மிளகாய் அரைத்து போனை உற்பத்தி செய்து வருகிறது.
ஆனால் RECIPROCAL TARIFFS வரி காரணமாக இந்தியாவில் இருந்து வரும் போனுக்கும் 10% வரி விதிக்கப்பட்டால் சாம்சங் நிறுவனத்திற்கு லாபம் குறைந்துவிடும். மறுபுறம் விலை அதிகமாக இருப்பதால் அமெரிக்க மக்களும் இப்பொருளை வாங்க மாட்டார்கள். அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும்.
இதெல்லாம் டிரம்ப்புக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் வரியை போட்டே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். அதுவும் இன்று பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போதோ, அல்லது சந்திப்புக்கு பின்னரோ RECIPROCAL TARIFFS வரி அறிவிப்பு வந்தால், நமக்கு தர்ம சங்கடமாகிவிடும்.
இருந்தாலும் அமெரிக்காவின் நீண்ட கால நண்பன் இந்தியா என்பதால் இதில் விலக்கு கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications