அந்த அடி அடித்துவிட்டு.. மீண்டும் சீனாவை சீனுக்குள் இழுக்கும் டிரம்ப்! இந்தியாவுக்குதான் சிக்கல்
நியூயார்க்: சீனா மீது டிரம்ப் வரி போட்டிருப்பதால், அந்நாடு கடுப்பாகியிருக்கிறது. இருப்பினும் சீனாகூட வியாபாரம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வரியும் போட்டுவிட்டு, டிக்டாக் போன்ற சீனாவின் ஆப்ஸ்களையும் தடை செய்துவிட்டு, கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று டிரம்ப் பேசியிருப்பது, இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபருக்கு என ஒதுக்கப்பட்ட தனி விமானமான 'Air Force One'-ல் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், சீனாவுடனான வர்த்தகத்திற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர்கள் வரிசையில் சீனாவுக்கு இந்த அளவுக்கு குடைச்சல் கொடுத்த ஒரே அதிபர் டிரம்ப் மட்டும்தான். சீனாவுக்கு மட்டுமல்ல, பக்கத்து நாடுகளான கனடா, மெக்சிகோவுக்கும் டிரம்ப் வரி போட்டு செய்வினை செய்திருக்கிறார்.
இதனால், டிரம்ப் எப்போது என்ன மனநிலையில் இருப்பார் என்பதை கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சீனாவை பொறுத்தவரை இவர் 10% வரியை விதித்திருந்தார். அதாவது சீன நூடுல்ஸ் அமெரிக்காவில் 10 டாலர் விலைக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், வரி காரணமாக விலை 11 டாலராக உயர்ந்திருக்கிறது. சீனாவின் பொருட்கள் மீது 10% விலை உயர்ந்திருக்கிறது. இது சீனாவை டென்ஷனாக்கியிருக்கிறது.
இந்த டென்ஷனுக்கு வரி மட்டுமே காரணம் கிடையாது. டிக்டாக் செயலியை தடை செய்தது, Huawei நிறுவனத்தின் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது, தைவான் விஷயத்தில் தலையீடு என எல்லாம் சேர்த்து சீனாவை சீண்டியிருக்கிறது. ஆனாலும் சீனா அமைதியாகத்தான் இருக்கிறது. காரணம், வர்த்தகம்தான்.
அமெரிக்காவுக்கு தேவைப்படும் பொருட்களில் 18% சீனாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இதன் மதிப்பு ₹3.701 லட்சம் கோடி. எனவே இந்த வர்த்தக உறவை கெடுத்துக்கொள்ள சீனா விரும்பவில்லை. ஆனால் சும்மா இல்லாத டிரம்ப் மீண்டும் மீண்டும் சீனாவை குறி வைத்து வருகிறார். அதாவது சீனா மீதான வரி 25% வரை உயர்த்த இருப்பதாகவும், குறிப்பாக மரக்கட்டைகள் மீதான வரியை உயர்த்துவதில் டிரம்ப் பிடிவாதமாக இருக்கிறார். (மரகட்டை ஏற்றுமதியில் சீனாதான் டாப்)
இதையெல்லாம் பேசிவிட்டு மீண்டும் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியாது. ஆனால், டிரம்பின் பேச்சு சர்வதேச வர்த்த அரங்கில் சில கருத்தியல்களை உருவாக்கும்.
உதாரணமாக வரி காரணமாக சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் பொட்டியை கட்டிக்கொண்டு இந்தியாவுக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தன. ஆனால், டிரம்ப் வர்த்தகம் குறித்து பேசியிருப்பதால், இப்போதைக்கு சீனாவை விட்டு கிளம்பும் வேலையை தற்காலிகமாக நிறுவனங்கள் நிறுத்தி வைக்க கூடும். இது இந்தியாவின் எதிர்பார்ப்பில் விழுந்த பெரிய அடி.
சீனாவில் உற்பத்தி ஆலையை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்தால், இங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும், நாட்டின் பொருளாதாரமும் உயரும். நிறுவனங்களை ஈர்க்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் இந்தியா முன் தயாரிப்பு திட்டமிடலை யோசித்து வரும் நிலையில் குட்டையை குழப்பியுள்ளார் டிரம்ப்.
டிரப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றமடைந்திருந்தாலும், அடுத்தடுத்து வரும் நாட்களில் இதே வாய், சீனாவோடு யாரும் அன்னம் தண்ணி பழகக்கூடாது என்று கூறும். எனவே, முயற்சியையும், எதிர்பார்ப்பையும் கைவிடாமல் காத்திருக்க வேண்டும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications