மண்ணாசை டிரம்ப்.. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் அமெரிக்கா! நிபுணர்கள் வார்னிங்
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வான பின்னர் கனடாவையும், கிரீன்லாந்தையும், பனாமா கால்வாயையும் கைப்பற்றுவோம் என்று கூறி வருவது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் பெரும் மண்ணாசை பிடித்தவராக இருக்கிறார் என்றும், அதேபோல சீனாவும், ரஷ்யாவும் நினைத்தால் அதன் விளைவுகள் கொடுமையானதாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் வார்னிங் செய்திருக்கிறார்கள்.

1. காசாவை வாங்குவது
2. கனடாவை 51வது மாகாணமாக மாற்றுவது
3. டென்மார்க்கின் கிரீன்லாந்தை வாங்குவது
4. பனாமா கால்வாயை வசப்படுத்துவது
இவைதான் டிரம்ப் முன்வைத்துள்ள சர்ச்சையான விஷயங்கள். இதற்கு அமெரிக்காவின் எதிரி நாடுகள் மட்டுமல்லாது நட்பு நாடுகளே கடும் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கியுள்ளன.
முதலில் காசாவிலிருந்நது தொடங்குவோம். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான் காசா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் தொடக்கத்திலிருந்து ஒத்து வராது. இந்தியா-பாகிஸ்தான் போல அடித்துக்கொண்டிருப்பார்கள். அடிப்படையில் இஸ்ரேல்தான் இந்த பிரச்சனைக்கு காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் கூட்டாளி என்பதால், உலக அரங்குக்கு பாலஸ்தீனம் தீவிரவாத நாடாக காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்.7ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையாக போர் தொடங்கியது.
போர் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை பாதித்திருக்கிறது. காசா எனும் துண்டு நிலம், திறந்தவெளி சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஐநா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இது குறித்து குரல் எழுப்பி, இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவித்தது.
இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட டிரம்ப், காசா மக்களை எகிப்துக்கும், ஜோர்டனுக்கும் அனுப்பி வைத்தவிட்டு, காசாவை தான் வாங்கிக்கொள்வதாக கூறியிருக்கிறார். இதற்கு ஜோர்டன், எகிப்து, ஈரான், சீனா என பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அடிப்பட்டவனுக்கு மருந்து கொடுக்க சொன்னால், அவன் குடியிருக்கும் வீட்டை நான் வாங்கிக்கிறேன் என கந்துவட்டிகாரன் கணக்காக டிரம்ப் பேசுவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கனடா விஷயத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி டாலரை அந்நாட்டுக்கு அமெரிக்கா செலவழிப்பதாகவும், எனவே அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை என்று டிரம்ப் கூறி வருகிறார். இவர் சொல்வது ஒருவகையில் சரியானது மாதிரிதான் தோன்றும். ஏனெனில் அமெரிக்கா மக்களுக்கு தேவையான ஆட்டோமொபைல் தொடங்கி, ஆடைகள் வரை பலவும் கனடாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, கனடாவை இழுத்து போட்டுக்கொண்டால் பிரச்சனை இல்லையே என்கிற வாதமும் எழத்தொடங்கியுள்ளது.
ஆனால் நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கிறோம். இங்கு நாட்டை பிடிக்க போர்கள் நடத்தப்படுவதில்லை. அதை யாரும் ஏற்கவும் போவதில்லை. எனவே, மண்ணாசையை டிரம்ப் கைவிட வேண்டும்.
சரி காசா, கனடாவோடு இந்த பிரச்சனை முடிகிறதா? என்று கேட்டால் இல்லை. டென்மார்க் வசம் உள்ள கிரீன்லாந்து தீவை கைப்பற்றப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய தீவாக இருக்கும் இதில், 80% நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கிறது. அப்புறம் ஏன்? இந்த நிலத்தை வாங்க இப்படி டிரம்ப் துடிக்கிறார்? எனில், கிரீன்லாந்தில் தாது வளம் அதிகமாக இருக்கிறது.
எல்லா நாடுகளிலும்தான் தாது வளம் இருக்கிறது. ஆனால் கிரீன்லாந்தில் மட்டும்தான் யுரேனியம், லெட், ஜிங்க் உள்ளிட்ட தாதுகள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் யுரேனியத்தை வைத்து அணு ஆயுதத்தையும், மின்சாரத்தையும் தயாரிக்கலாம். இந்த தாதுகளுக்கு தற்போது வரை அமெரிக்கா சீனாவைத்தான் நம்பியிருக்கிறது. அதுவே, கிரீன்லாந்தை கைப்பற்றினால் சீனாவை நம்ப வேண்டியதில்லை. இது தவிர இங்கு இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யும் அதிகமாக இருக்கிறது.
ஆனால் அப்படி மட்டும் நடந்தால் 3வது உலகப்போர் நிச்சயம் வெடிக்கும் .
கடைசியாக பனாமா காவல்வாய் விஷயத்துக்கு வருவோம். இந்த கால்வாய் அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் இணைக்கிறது. இது மட்டும் இல்லையெனில் தென் அமெரிக்க கப்பல்கள் பல ஆயிரம் கி.மீ தொலைவுக்கு சுற்றிக்கொண்டுதான் ஐரோப்பிய நாடுகளுக்கு போக முடியும். அந்த வகையில் எரிபொருளையும் நேரத்தையும் இக்கால்வாய் சேமிக்கிறது. உலக வர்த்தகத்தில் 6% இந்த கால்வாய் வழியாகத்தான் நடைபெறுகிறது.
ஆரம்பத்தில் இதனை பிரான்ஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பின்னர் அமெரிக்கா கைப்பற்றி டெவலப் செய்தது. ஆனால், இக்கால்வாய் அமைந்திருக்கும் பனாமா நாட்டுக்குதான் இதன் மீது முழு உரிமை என்று பேச்சுகள் எழுந்தன. இதனையடுத்து 1977 அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் என்பவர் Torrijos-Carter Treaties எனும் ஒப்பந்தத்தை போட்டார்.
அதன்படி 1999க்கு பிறகு பனாமாவுக்கே அந்த கால்வாய் சொந்தம் என்று கூறியிருந்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மாற்றி, தற்போது டிரம்ப் மீண்டும் பனாமா கால்வாயை கைப்பற்ற நினைப்பது நிச்சயம் போரைதான் தூண்டும். எனவே டிரம்ப் தனது மண்ணாசையை விட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன. தவறும்பட்சத்தில் அமெரிக்கா போரில் பங்கேற்க வேண்டி வரும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications