மொத்தமாய் முடிச்சு விட்ட டிரம்ப்.. அமெரிக்க படிப்பு கனவுக்கு ஆப்பு தானா? விரட்டியடிக்கும் எம்பசிகள்!
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விலங்குகளை போல கை கால்களில் விலங்கிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கல்விக்காக எஃப் -1 விசா கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளின் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிராகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 41% மாணவர்களின் எஃப் - 1 விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு உலக அளவில் பொருளாதார ரீதியாகவும், குடிமை ரீதியாகவும் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதாக கூறி நட்பு நாடுகள் மீது வர்த்தக போர் தொடுக்கப்பட்டு இருக்கிறது.

பதிலுக்கு பதில் வரி விதித்தால் அமெரிக்காவுக்கு எதிராக சீனா, கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் திரும்பி இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியதாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கொத்துக்கொத்தாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும், படிப்பு மற்றும் சுற்றுலா விசா கேட்டு வருபவர்களையும் அமெரிக்க தூதரகங்கள் விரட்டியடித்து வருகின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமெரிக்க தூதரங்கள் செயல்பட்டு வரும் நிலையில் விசா கேட்டு வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் 41 சதவீதம் வரை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 கணக்கெடுப்பின் படி அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களை இந்தியர்கள் மட்டும் மூன்று லட்சம் பேர் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
அதற்கு அடுத்ததாக சீனா, தென் கொரியா, கனடா, வியட்நாம், தைவான், பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கி படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எஃப் - 1 விசா வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இதற்காக அவர்கள் உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்க தூதரகங்களில் விண்ணப்பிக்கிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாணவர்களின் எஃப் - 1 நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு சுமார் ஏழரை லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் மாணவர் விசா கேட்டு விண்ணப்பித்த நிலையில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஃப் 1 விசா கேட்டு ஆறு லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்க தூதரகங்களில் விண்ணப்பித்த நிலையில் 4. 1 லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 2.79 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி 41% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்தியர்களை அனுமதிப்பதும் 38 சதவீதம் குறைந்திருக்கிறது என கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் நிராகரிப்பு சதவீதம் 25%ஆகவும், 2016ல் 34%, 2017ல் 35%, 2018ல் 35%, 2021ல் 25%, 2022ல் 35%, 2023 36% என்ற எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications