உக்ரைன் போர்: இன்று கூடுகிறது ஐநா பொதுச் சபையின் அவசரக் கூட்டம்! ரஷ்யாவுக்கு இறுகும் பிடி!
நியூயார்க்: உக்ரைன் ரஷ்யா போர் குறித்து விவாதிக்க ஐநா பொதுச் சபையின் அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் உலக நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன. கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யர்கள் விளம்பரங்களை கொடுக்க தடை விதித்துள்ளன.
அது போல் வான்வெளியை பயன்படுத்த தடை , முக்கிய அமைப்புகளிலிருந்து ரஷ்யா நீக்கம் போன்ற நடவடிக்கைகள் அந்நாட்டிற்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

ரஷ்யா உக்ரைன் போர்
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ரஷ்யா உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். உக்ரைனிலிருந்து ரஷ்யா படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 15 நாடுகளில் 11 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இந்தியா வாக்களிக்கவில்லை
இந்தியா, சீனா, ஐக்கிய அரபு நாடுகள் வாக்களிக்கவில்லை. இதில் இந்தியா நடுநிலை வகிப்பதற்காக வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டது. மெஜாரிட்டி ஆதரவு உள்ள தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா வாக்களித்தது. இதனால் இந்த தீர்மானம் நீர்த்து போனது. இதையடுத்து ஐநா பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டுவது குறித்து முடிவெடுக்க பாதுகாப்பு கவுன்சில் நேற்று மீண்டும் கூடியது.

ஐநா பொதுச் சபை கூடுகிறது
இந்த நிலையில் இன்று ஐநா பொதுச் சபை கூடுகிறது. 193 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகளுக்கு ஐநா பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்படுகிறது. 80 க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அந்நாட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

11 ஆவது முறை கூடுகிறது ஐநா அவசர சபை
இந்த கூட்டத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு இது போன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுவது இதுதான் 11 ஆவது முறை. இன்று அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு இந்த கூட்டம் கூடுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ். திருமூர்த்தி, உக்ரைனில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது கவலையளிக்கிறது.

பேச்சுவார்த்தையே தீர்வு
இரு நாடுகளும் ஜனநாயக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும். பெலாரஸ் எல்லையில் ரஷ்யா, உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவித்ததை வரவேற்கிறோம். உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நலனில் இந்தியா மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. அவர்களை மீட்பதில் சிக்கல் நிலவுவதாகவும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications