பிரமிளா ஜெயபால் விவகாரம்- அமெரிக்கா எம்.பி.க்களை சந்திக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது அமெரிக்கா எம்.பிக்கள் குழுவினரையும் சந்திக்க ஜெய்சங்கர் திட்டமிட்டிருந்தார்.
அத்துடன் ஜெய்சங்கர் சந்திக்கும் அமெரிக்கா எம்.பி.க்கள் குழுவில் இந்திய வம்சாவளி எம்.பி.யான பிரமிளா ஜெயபால் இடம்பெறக் கூடாது எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி. ஆகியவை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து வருபவர் பிரமிளா ஜெயபால்.
இதனால் எம்.பி.க்கள் குழுவில் அவர் இடம்பெறக் கூடாது என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் அமெரிக்கா எம்.பி.க்கள் குழுவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்க மறுத்துவிட்டார்.
விருது மேல் விருதை குவிக்கும் எஸ்.பி.வேலுமணி... உள்ளாட்சித்துறைக்கு 31 தேசிய விருதுகள்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்தும் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து சரியான புரிதல்கள் அவரிடம் இல்லை. ஆகையால் அவருடனான சந்திப்பை விரும்பவில்லை என விளக்கம் அளித்துள்ளார் ஜெய்சங்கர். மத்திய அமைச்சரின் இம்முடிவு இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.