இந்தியாவிற்கு எதிரான வர்த்தக போரை.. அதிகாரபூர்வமாக தொடங்கிய அமெரிக்கா.. வெள்ளை மாளிகை முடிவு
நியூயார்க்: இந்தியாவின் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 25% கூடுதல் வரிகளை ஆகஸ்ட் 27 முதல் அமல்படுத்த அமெரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) ஆகஸ்ட் 26 அன்று, இந்த புதிய வரிகள் குறித்த அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டது. இது ஆகஸ்ட் 27 அன்று அதிகாரப்பூர்வ பதிவேட்டில் வெளியிடப்படும் என அத்துறை தெரிவித்துள்ளது. அதாவது நாளை முதல் இந்த வரிகள் அமலுக்கு வருவது உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளது. இந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 6, 2025 அன்று அதிபர் டிரம்ப் பிறப்பித்த 14329-வது நிர்வாக உத்தரவைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவின் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்திய தயாரிப்புகளின் இறக்குமதி மீது குறிப்பிட்ட வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. 50% வரை பல பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்.

டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு அபராதமாக 25% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் 7, 2025 முதல் அமலில் உள்ள 25% வரியுடன், இந்த கூடுதல் 25% வரியும் சேர்க்கப்படும். இந்த இரண்டு வரிகளும் நாளை முதல் அமலுக்கு வரும்.
இந்தியப் பொருட்கள் மீது 50% வரி
அமெரிக்க உள்துறையின் அறிவிப்பின்படி, இந்த வரிகள் ஆகஸ்ட் 27, 2025 அதிகாலை 12:01 மணி அல்லது அதற்குப் பிறகு, நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அல்லது கிடங்கில் இருந்து நுகர்வுக்காக திரும்பப் பெறப்படும் இந்தியப் பொருட்கள் மீது 50% வரி அமலுக்கு வரும். இருப்பினும், இரும்பு, எஃகு, அலுமினியப் பொருட்கள், பயணிகள் வாகனங்களான செடான், ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள், மினிவேன்கள், லாரிகள், மற்றும் செமி-ஃபினிஷ்ட் காப்பர், காப்பர் டெரிவேட்டிவ் பொருட்கள் போன்றவற்றுக்கு இந்த கூடுதல் வரிகள் பொருந்தாது.
இந்த வரிவிதிப்பின் தாக்கம் எவ்வளவு மோசமாக இருக்கும்?
2024 இல், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தது, ஏற்றுமதியின் மதிப்பு 87.3 பில்லியன் டாலர்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள அதிக வரி விதிப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமையும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் துவ்வுரி சுப்பாராவ் எச்சரித்துள்ளார். ஜவுளி மற்றும் ரத்தினங்கள் போன்ற தொழிலாளர் மிகுந்த ஏற்றுமதித் துறைகளில் 50% அமெரிக்க வரி விதிப்பால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 2% மதிப்பிலான ஏற்றுமதிகள் பாதிக்கப்படும். இதனால் பலர் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கும்
இந்த வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சி ஒரு வருடத்திற்குள் 20-50 அடிப்படை புள்ளிகள் வரை குறையக்கூடும்.. இதனால் பலர் வேலைகளை இழக்க நேரிடும் என சுப்பாராவ் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் நிதிச் செயலாளராகவும் பணியாற்றிய சுப்பாராவ், அமெரிக்க அதிபரால் 'செயலிழந்த' பொருளாதாரம் என முத்திரை குத்தப்படுவது இந்தியாவின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், ஜவுளி, காலணி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற விலைப் போட்டி மற்றும் பெருமளவு உற்பத்திக்கு பெயர் பெற்ற தொழிலாளர் மிகுந்த துறைகளில் லாப வரம்புகள் குறையும் இந்த துறைகள் பாதிக்கப்படும், ஆர்டர்கள் திசை திருப்பப்படும், வேலைகள் பறிபோகும், மற்றும் ஆலைகள் சுருக்கப்படும். இதன் தாக்கம் சமத்துவமற்றதாக இருக்கும், வருமான ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும், என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications