60 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்.. ஜான் எஃப் கென்னடி படுகொலை ஆவணங்களை வெளியிட்ட டிரம்ப்!
நியூயார்க்: சுமார் 60 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை தொடர்பான பல்லாயிரம் பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் 25வது அதிபரான ஜான் எஃப். கென்னடி, கடந்த 1963-ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகாணம், டாலஸ் நகருக்கு வருகை தந்து, தனது காரில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கும்போது அடுக்குமாடி கட்டடத்தில் மறைந்திருந்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

2 நாட்களுக்கு பிறகு மற்றொரு சிறைக்கு மாற்றப்படும்போது அவரை ஜாக் ரூபி என்பவர் சுட்டுக் கொன்றார். ஜான் எஃப். கென்னடியை தனி நபராகத்தான் ஆஸ்வால்ட் படுகொலை செய்தார் என்று விசாரணை முடிவுகள் தெரிவித்தாலும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம், இது சோவியத் ரஷியாவின் சதிச் செயல் என்பது போன்ற பல்வேறு ஊகத் தகவல்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன.
இந்த ஜாக் ரூபியும் 1967 ஆம் ஆண்டு புற்றுநோயால் பலியானார். கென்னடியின் படுகொலையைத் தொடர்ந்து அதிபராகப் பதவியேற்ற லிண்டன் பி. ஜான்சன், ஜான் எஃப் கென்னடி கொலையை விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி இயர்ல் வாரன் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்திருந்தார்.
இந்நிலையில், ஜான் கென்னடி படுகொலை தொடர்பான சந்தேகங்களைக் களையும் வகையில் அந்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். அதையடுத்து, தனது வலைதளத்தில் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் சுமார் 63,000 பக்க ஆவணங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
60 வருடங்களாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஜான் கென்னடி கொலை தொடர்பான ஆவணங்கள் அமெரிக்க அரசால் வெளியிடப்பட்டு உள்ளன. எனினும், இன்னும் பல முக்கிய ஆவணங்கள் வெளியிடப்பட வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர்கள், வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications