’ரத்த பணம்’ இந்தியாவை மீண்டும் கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர்
நியூயார்க்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் விமர்சித்து வரும் நிலையில், அவரது ஆலோசகர் நவரோ ஒரு படி மேலே சென்று இந்தியாவை இந்த விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளால் சாடி வருகிறார். சமீபத்தில் நவரோவின் கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது இரத்த பணம் என்று இந்தியாவை விமர்சித்து பேசியிருக்கிறார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது கடும் விமர்சனங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியா நடத்துகிறது என்று கூட கடுமையான விமர்சனங்களை டிரம்ப் ஆதரவு தரப்பினர் முன்வைத்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக 25 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார்.

50 சதவீத வரி விதிப்பு
பரஸ்பர வரி விவகாரத்தில் விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக இந்த 25 சதவீத வரியையும் சேர்த்து மொத்தம் 50 சதவீத வரியை இந்தியாவுக்கு எதிராக விதித்துள்ளார். அமெரிக்காவின் இந்த வரி மிரட்டலை கண்டு கொள்ளாத இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை தொடர்ந்து வருகிறது. இதனால், கடுப்பாகியுள்ள டிரம்ப் இந்தியா மீது மேலும் வரிகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து பின்னலாடை உள்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் அமெரிக்கா கூடுதலாக வரி விதிப்பது பற்றி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி பாதிப்பை சரி செய்வது தொடர்பாக இந்தியா தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
'இரத்தப் பணம்' என விமர்சித்த அமெரிக்கா
இது ஒருபக்கம் இருக்க, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து இந்தியாவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நவரோ கூறுகையில், "இந்த கொள்முதல் 'இரத்தப் பணம்' (blood money) எனவும், உக்ரைன் போருக்கு முன் இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
நவரோ தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: "உண்மை என்னவென்றால், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு ரஷ்ய எண்ணெயை இந்தியா அதிக அளவில் வாங்கவில்லை. இது இரத்தப் பணம்; மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.
மோடி சிறந்த தலைவர்
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் நவரோ வைத்த குற்றச்சாட்டு ஒன்று கடும் விமர்சனத்திற்குள்ளானது. "இந்திய மக்களின் இழப்பில் பெரும் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். இதனை நாம் நிறுத்த வேண்டும். மோடி சிறந்த தலைவர். புதின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் எப்படி இந்திய தலைவர்கள் ஒன்றிணைகிறார்கள் என்பது புரியவில்லை" என்று கூறியிருந்தார்.
நவரோவின் இந்த கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரும் நவரோவின் பேச்சை விமர்சித்து இருந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய தொடங்கியது.












Click it and Unblock the Notifications