கலிபோர்னியாவில் ஜாதி பாகுபாட்டிற்கு தடை! அதிரடி சட்டத்திற்கு காரணமான தமிழ்ப்பெண்! யார் இந்த தேன்மொழி
நியூயார்க்: ஜாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதாவிற்கு கலிபோர்னியா மாகாண செனட் நீதிக்குழு ஒரு மனதாக அங்கீகாரம் அளித்துள்ளது. ஜாதி என்பதை இனவெறி, மதவெறி, நிறவெறி போன்ற பாகுபாட்டு கொள்கைகளில் ஒன்றாக கலிபோர்னியா மாகாண செனட் நீதிக்குழு அறிவித்து உள்ளது.
உலகத்தில் எந்த மூலையில் ஜாதி பாகுபாடு நடந்தாலும் எல்லோர்க்கும் அம்பேத்கார் சொன்ன ஒரு வரிதான் நினைவில் வரும்... இந்துக்கள் பூமியின் எந்த பகுதிக்கு சென்றாலும்.. அவர்கள் தங்களுடன் ஜாதியையும் கொண்டு செல்வார்கள்.. அதன்பின் இந்தியாவின் ஜாதி பிரச்சனை மொத்த உலகத்தின் பிரச்சனையாக மாறிவிடும்.. இதை சொன்னவர் டாக்டர் பிஆர் அம்பேத்கார்.
அதுதான் தற்போது உலகம் முழுக்க நடந்து வருகிறது. இங்கிலாந்து, கனடா என்று இந்துக்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஜாதியையும் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். தற்போது அதுதான் அமெரிக்காவிலும் நடந்து உள்ளது.

அங்கு இருக்கும் ஓசி பிரிவு இந்துக்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களை மோசமாக நடத்துவதாக, அவர்களுடன் ஜாதி பிரிவினை காட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த நாட்டின் பிரச்சனைகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது.
இது கிட்டத்தட்ட நிறவெறிக்கு இணையாக அங்கே நடக்க தொடங்கி உள்ளது. இந்த புகார்கள் இன்று, நேற்றல்ல பல காலமாக வைக்கப்பட்டு வரும் புகார்கள். ஆனால் இனவெறி, மதவெறி, நிறவெறி ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியும் அமெரிக்கர்களால் இந்த பிரிவினையை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை..
இப்போதும் கூட ஆங்கிலத்தில் "pariah" என்ற வார்த்தையை தாழ்வான ஒன்றை குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தையாகவே ஆங்கிலம் பேசும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கு இருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்.. பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர்.. முக்கியமாக கல்லூரிகளில் தாங்கள் சக இந்துக்கள் மூலம் ஜாதி ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கிறோம் என்று கூறி வந்தாலும் அதை பெரிதாக அமெரிக்க சமூகம் இவ்வளவு நாட்கள் கண்டுகொள்ளவில்லை.
இதற்கு எதிராக அங்கே பிரேம் பறையா, தேன்மொழி சௌந்தரராஜன் உள்ளிட்ட பல தலித் போராளிகள் கடுமையாக போராடி வந்தனர்.அமெரிக்கர்களுக்கு இப்போதுதான் ஜாதிய பாகுபாட்டின் தீமைகள் தெரிய தொடங்கி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகம் ஜாதி என்பதை இனவெறி, மதவெறி, நிறவெறி போன்ற பாகுபாட்டு கொள்கைகளில் ஒன்றாக கடந்த வருடம் ஜனவரி 1ம் தேதி அறிவித்தது. அதாவது ஜாதி ரீதியாக ஒருவரை பாகுபடுத்தினால் அது தண்டனைக்கு உரிய குற்றம்.
அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாண பல்கலைக்கழகம் இது.. இந்த பல்கலை இப்படி ஒரு உத்தரவை போட்டு இருப்பது உலகம் முழுக்க பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின் பல மாகாணங்களில் இருக்கும் பெரிய கல்வி நிலையங்களில் இதே கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

அமெரிக்காவில் ஒரு வெள்ளையின இளைஞர் கறுப்பின இளைஞரை "nigga" என்று அழைப்பது எப்படி தவறானதா.. அதேபோல் இனி அமெரிக்காவில் உள்ள பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் சக இந்துக்கள் இழிவாக விழிப்பது, ஜாதி சொல்லி அழைப்பது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படும்.
கலிபோர்னியா பல்கலையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வரிசையாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவில் இதே அறிவிப்பை வெளியிட்டு வந்தன.
பல்கலைக்கழகம்: பல்கலைக்கழகம் தாண்டி தற்போது, ஜாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதாவிற்கு கலிபோர்னியா மாகாண செனட் நீதிக்குழு ஒரு மனதாக அங்கீகாரம் அளித்துள்ளது. ஜாதி என்பதை இனவெறி, மதவெறி, நிறவெறி போன்ற பாகுபாட்டு கொள்கைகளில் ஒன்றாக கலிபோர்னியா மாகாண செனட் நீதிக்குழு அறிவித்து உள்ளது.
இந்த மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால் அங்கே ஜாதி பாகுபாட்டிற்கு முழுமையான தடை வரும். அதோடு ஜாதி பாகுபாட்டை தடை செய்த முதல் மாகாணமாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாறும்.
இந்த சட்டம் அங்கே கொண்டு வரப்பட முக்கியமான காரணமாக இருந்தவர் தேன்மொழி சௌந்தரராஜன் என்னும் தமிழ் பெண்.
Equality Labs என்னும் அமைப்பை நடத்தி வரும் இவர் அங்கே ஜாதி பாகுபாட்டிற்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார். பல சட்ட வல்லுநர்களை இவர் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டு, இதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். தேசிய அளவில் நாடு முழுக்க பல போராட்டங்களை நடத்தி உள்ளார்.

அவர் நடத்திய மீட்டிங்குகள், கூட்டங்கள் என்ற தொடர் முன்னெடுப்பு காரணமாக இந்த சட்டம் அங்கே முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த நாள் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். கலிபோர்னியா நீதிக்குழுவில் இந்த சட்டம் ஒப்புதல் பெற்றது மிக்க மகிழ்ச்சி.
ஜாதி பாகுபாட்டை ஒழிப்பதற்கான வழியில் நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். இந்த சட்டம் மிக அவசரம் ஆனது. விரைவில் இது செனட் ஒப்புதலை பெறும் என்று நம்புகிறேன். இங்கே ஆசிய அமெரிக்கர்கள் பலர் ஜாதி பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அங்கே புதிய செனட்டராக தேர்வான ஆயிஷா வஹாப் என்ற இஸ்லாமிய பின்னணி கொண்ட செனட்டர்தான் இந்த சட்டத்தை அறிமுகம் செய்தது.
அமெரிக்காவில் வசிக்கும் தேன்மொழி சௌந்தரராஜன் மதுரையை சேர்ந்தவர். மதுரைக்கு அருகிலுள்ள கிராமப்புறத்திலிருந்து குடிபெயர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதி பாகுபாடுகளை சக இந்தியர்களிடம் இருந்து எதிர்கொண்ட அவர்.. அம்பேத்கார் போலவே சமீபத்தில் புத்த மதத்திற்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications