நீலகிரி அவலாஞ்சியில் 2 புலிகள் இறந்து கிடந்த விவகாரம்: மாட்டை கொன்றதால்.. விஷம் வைத்தவர் கைது
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் இரண்டு புலிகள் இறந்து கிடந்த விவகாரத்தில், புலிகள் விஷம் தடவி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மாட்டை அடித்துக் கொன்ற ஆத்திரத்தில் சேகர் என்பவர் புலிகளுக்கு விஷம் வைத்தது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி வனசரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேரு நகர் பாலத்தில் இரண்டு புலிகள் இறந்து கிடந்தன. இது குறித்த தகவல் கிடைத்ததும், நிகழ்விடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனக்காவலர்கள் இறந்து கிடந்த இரண்டு புலிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருந்தனர். புலிகளின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதால் அவை சண்டையிட்டு உயிரிழக்கவில்லை என கருதப்பட்டது.

இறந்தது இரண்டுமே பெண் புலிகள் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் வன ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனவிலங்கு வேட்டைக்காரர்கள் வியாபார நோக்கத்திற்காக புலிகளை விஷம் வைத்து கொன்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே, புலிகள் இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மாடு ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். அந்த மாட்டின் உரிமையாளர் யார்? என்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட திடுக்கிட வைக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

தனது மாட்டை புலி அடித்துக் கொன்றதால் கோபத்தில் பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை மாட்டின் மீது தடவி விட்டு வந்ததாகவும் அந்த மாட்டை தின்ற புலிகள் உயிரிழந்ததாகவும் சேகர் என்பவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications