பழங்களால் ஆன பட்டாம்பூச்சி.. பரவசப்படுத்தி பழ கோபுரம்.. குன்னூரில் களை கட்டிய கண்காட்சி!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று 61-வது பழக்கண்காட்சி துவங்கி உள்ளது.
குன்னூர்: பழங்களால் ஆன பட்டாம்பூச்சி.. அழகான பழ கோபுரம்.. இப்படியாக களை கட்டியுள்ளது குன்னூர் பழக் கண்காட்சி.
வருடா வருடம் நடைபெறும் விழா இது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் மலர்க் கண்காட்சி, பழக் கண்காட்சி ஆகியவை ஊட்டி மற்றும் குன்னூரில் நடத்தப்படும்.
அந்த வகையில், குன்னூரில் உள்ள புகழ் பெற்ற சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கு இது நடைபெறும்.
இது 61வது பழக் கண்காட்சி ஆகும். தமிழக அரசின் தோட்டக் கலைத்துறை சார்பில் இது நடத்தப்படுகிறது. கண்காட்சியையொட்டி பழங்களால் ஆன விதம் விதமான அமைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
சிம்ஸ் பூங்காவின் நுழைவு வாயிலில் 12அடி உயரத்தில் பலாப்பழம் உட்பட பல்வேறு பழங்களால் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது காண்போர் அனைவரையும் இனிப்புடன் வரவேற்பது போல் அமைந்துள்ளது.
மேலும் இந்த வருடம் சிறப்பம்சமாக ஆரஞ்சு,சாத்துக்குடி, பைனாப்பிள், பிளம்ஸ், டார்ஜன் போன்ற பல்வேறு பழங்களை கொண்டு பழகோபுரம், மயில் மற்றும் பட்டாம் பூச்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை சார்பாக 10 க்கும் மேற்பட்ட அரங்குகள் மறும் தனியார் அரங்குகளில் முள்சீதா பழம், துரியன் பழம், வெல்வெட் ஆப்பிள், முட்டை பழம், பம்ளிமாஸ் பழம், ரோஸ் ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த 17ம் தேதி ஊட்டியில் மலர்க் கண்காட்சி தொடங்கி 22ம் தேதி வரை நடந்தது. அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பார்வையிட்டுச் சென்றனர். இந்த நிலையில் தற்போது 2 நாள் பழக் கண்காட்சி தொடங்கியுள்ளது.