ஒரு டீக்கடைக்காரராக மகிழ்கிறேன்.. நீலகிரி போனதுமே ‛டோனை’ மாற்றிய பிரதமர் மோடி! குவிந்த கைத்தட்டு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடந்த பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது ‛‛ அழகான தேயிலை தோட்டம் உள்ள இந்த பகுதிக்கு வந்தால் ஒரு டீக்கடைக்காரருக்கு சந்தோஷம் இருக்காதா என்ன? ’’ எனக்கூறி கவனத்தை ஈர்த்தார்.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி பிரதமர் மோடி 7 வது முறையாக நேற்று 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்தார். சென்னையில் நேற்று மாலையில் வாகன பேரணி நடத்தி பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

அதன்பிறகு இன்று பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2வது நாளாக பிரசாரம் செய்தார். இன்று காலையில் வேலூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதையடுத்து நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடிக்கு நிர்வாகிகள் தாமரை மலர்களால் உருவாக்கப்பட்ட மாலை அணிவித்தனர். அதன்பிறகு நீலகிரி - மத்திய அமைச்சர் எல் முருகன், கோவை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூர் - பாஜக வேட்பாளர் முருகானந்தம், பொள்ளாச்சி - வசந்தராஜன், ஈரோடு தாமாக வேட்பாளர் விஜயகுமார் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்து பேசினார். அப்போது தான் டீக்கடைக்காரராக மகிழ்கிறேன் எனக்கூறி கவனத்தை ஈர்த்தார்.
அதாவது உரையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, ‛‛தமிழ் சகோதர சகோதரிகளை வணக்கம். மேட்டுப்பாளையம் புண்ணிய பூமியில் இருந்து வணங்குகிறேன். மருதமலை முருகன், கோணியம்மனை வணங்குகிறேன். மேட்டுப்பாளையத்துக்கு கோவையின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் இருக்கிறது. அழகான தேயிலை தோட்டம் உள்ள இந்த பகுதிக்கு வந்தால் ஒரு டீக்கடைக்காரருக்கு சந்தோஷம் இருக்காதா என்ன?’’ என்று தெரிவித்தார். இதனை கேட்டவுடன் அங்கிருந்த தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ‛‛இன்னும் சில நாட்களில் தமிழ் புத்தாண்டு கொண்டாட உள்ளீர்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். கொங்கு, நீலகிரி எப்போதுமே பாஜகவுக்கு ஸ்பெஷல் தான். இதற்கு முன்பு அடல் ஜி (முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ) காலத்திலேயே நீங்கள் பாஜகவின் எம்பியை தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தீர்கள்’’ என்றார்.
இதுமட்டுமின்றி பிரதமர் மோடி காங்கிரஸ், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பாஜகவின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது. தமிழகம் முழுவதும் சொல்கிறது மீண்டும் ஒரு முறை மோடியின் ஆட்சி வேண்டும் என்று. திமுக, காங்கிரஸ் வம்ச வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஒரேயொரு குறிக்கோள் தான் உள்ளது. எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.
பல தலைமுறையாக ஆட்சியில் இருந்த இவர்கள் வறுமையை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம் என சொல்கின்றனர். ஆனால் இத்தனை காலம் அவர்கள் ஆட்சி செய்தும் நாட்டில் இருந்து வறுமை ஒழியவில்லை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடனே செய்த வேலை என்னவென்றால் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். காங்கிரஸ், திமுகவுடன் ‛இந்தியா’ கூட்டணியினர் பல தலைமுறைகளாக ஆட்சியில் இருக்கின்றனர். இவர்கள் பட்டியலின சகோதரர்கள், ஏழைகளுக்கு வீடு, மின்சாரம், குடிக்க தண்ணீர் கிடைக்காமல் செய்தனர். ஆனால் பாஜக அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு, மின்சாரம் வழங்கி உள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலின சகோதர சகோதரிகள் தான்.
இந்த பரம்பரை அரசியல் செய்ய விரும்பும் கட்சிகள் தங்களின் மகன், மகள்கள் தான் உயர் பதவிகளில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இவர்கள் ஏழை, எளிய, பட்டியலினத்தவர்களை முன்னேறி வர விடுவது இல்லை. ஆனால் முதல் முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக உயர்த்தி அழகு பார்த்தது பாஜக அரசு தான். இதற்கு கூட அவர்கள் ஆதரவு தெரிவிக்காமல் எதிர்ப்பு தான் தெரிவித்தனர்’’ என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications