கட்டிலுக்கு கீழே எட்டிப் பார்த்தா ... சிறுத்தை... மலங்க மலங்க விழித்தபடி.. கூடலூரில் பரபர
கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்த சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்
Recommended Video
கூடலூர்: யானையை பிடித்தார்களோ இல்லையோ, வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் 6 மணி நேரத்தில் பக்காவாக பிளான் போட்டு பிடித்துவிட்டார்கள்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கைவட்டா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ராயன். இவர் ஒரு விவசாயி. வீட்டிலேயே தோட்டம் இருக்கிறது. நேற்று மதியம் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்குள் நுழைந்தார்.
அப்போது வீட்டிற்குள் வித்தியாசமான சத்தம் ஒன்று வந்து கொண்டே இருந்தது. வீட்டிற்குள் சுற்றுமுற்றும் பார்த்தும் ஒன்றும் கண்ணில் படவில்லை. ஆனாலும் சத்தம் வந்து கொண்டே இருக்கவும், கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தார். அப்போது, ஒரு சிறுத்தை படுத்துக் கொண்டும் உறுமிக் கொண்டும் இருந்தது.
கட்டிலுக்கு அடியில் சிறுத்தை
வீட்டில் யாருமில்லாத போது வீட்டிற்குள் நுழைந்து கட்டிலுக்கு அடியில் படுத்து கொண்டிருப்பது பிறகு தான் தெரியவந்தது. இத்தனைக்கும் அந்த வீட்டிற்குள் ஆட்கள் இருந்திருக்கிறார்கள். யாருமே சிறுத்தை வந்ததை கவனிக்கவே இல்லை.
கூச்சலிட்டனர்
சிறுத்தையை பார்த்து பயந்து வீட்டை விட்டு எல்லோரும் வெளியே ஓடி வந்தனர். ஒரு பூட்டை எடுத்து வெளிப்பக்கமாக கதவை பூட்டிவிட்டு தெருவில் வந்து நின்று கூச்சலிட்டனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
2 வயது சிறுத்தை
விரைந்து வனத்துறையினரும் வீட்டில் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். அந்த சிறுத்தைக்கு 2 அல்லது 3 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
லாவகமாக பிடித்தனர்
சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதா, அல்லது வலை மூலம் பிடிப்பதா என்பது குறித்து கால்நடை மருத்துவர் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்கப்பட்டது. கடைசியாக கூண்டு வைத்து பிடிப்பது என முடிவு செய்து, கட்டிலுக்கு கீழே உள்ள சிறுத்தையை வனத்துறையினர் லாவகமாக பிடித்து கொண்டுபோய் காட்டில் விட்டார்கள்.