கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. ஆகஸ்ட் 26க்கு விசாரணையை ஒத்திவைத்த உதகை நீதிமன்றம்!
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் இறந்தனர். இதனைத்தொடர்ந்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஜெயலலிதா கார் ஓட்டுநர் குணசேகரன் மற்றும் தொழிலதிபர் செந்தில் குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முன் கொடநாடு வழக்கில் கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டது.
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி உள்ளிட்ட நான்கு பேர்மட்டும் ஆஜராகினர். பின்னர் கூடுதல் சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளதாக அரசுதரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் கனகராஜ் வாதங்களை வைத்த நிலையில் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜஹான் கூறுகையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக காவல்துறை மற்றும் தடயவியல் துறையை விசாரணை செய்ய போவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications