மசினக்குடி செல்லும் வழியில் இத்தனை ஆபத்துகளா.. காவு வாங்கும் கல்லட்டி சாலை.. திகில் ரிப்போர்ட்
ஊட்டி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியின் அழகை ஒரு பக்கம் ரசித்து வரும் நிலையில் அங்கிருக்கும் ஆபத்து குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு அங்குள்ள ஒரு சாலை ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு அங்குள்ள இடங்களை மட்டும் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வருவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் சிலர் ஊட்டியை சுற்றியுள்ள இடங்களான மசினக்குடிக்கு செல்ல விரும்புகிறார்கள். இங்கு முதுமலை புலிகள் சரணாலயம், தெப்பக்காடு யானைகள் முகாம் ஆகியவை இருப்பதாலும் கண்களுக்கு குளிர்ச்சியான மலைபகுதிகள் இருப்பதாலும் இங்கு வருகிறார்கள்.
மசினக்குடியில் நிறைய கும்கி யானைகளும் இருக்கின்றன. மசினக்குடிக்கு வருவோர் தங்கி இயற்கை எழிலை கண்டு களிக்க ரிசார்ட்களும் உள்ளன. இத்தனை அழகுகள் இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கிறது என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. மேலும் எப்போதும் நேர் வழியில் சென்றால் பிரச்சினை இல்லை. குறுக்கு வழியில் சென்றாலே ஆபத்துதான்.
ஆம் மசினக்குடிக்கு செல்ல வேண்டுமானால் ஊட்டியிலிருந்து கூடலூருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து மசினக்குடி செல்லலாம். ஆனால் இந்த நேர்வழி பாதையை யாரும் விரும்புவதில்லை. இந்த நேர்வழியில் சென்றால் பயண நேரம் அதிகம் என்பதால் மசினக்குடி செல்ல பலர் கல்லட்டி மலை பாதையை தேர்வு செய்கிறார்கள்.
இந்த கல்லட்டி சாலையானது மிகவும் ஆபத்தானது. அதிலும் மழை காலங்களில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என சொல்லும் அளவுக்கு உள்ளது. வெறும் 25 கி.மீ. தூரத்தை மிச்சப்படுத்த பலர் உயிரிழக்கும் செய்கிறார்கள். இந்த ஊட்டி டூ கல்லட்டி சாலையில் 35 கொண்டை ஊசி வளைவுகள் காணப்படுகின்றன. இந்த கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் எந்த கியரை இயக்க வேண்டுமென அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த அறிவிப்பு பலகைகளை பார்த்து யாருமே வாகனத்தை இயக்குவதில்லை என்கிறார் விவரம் அறிந்தவர்கள். மற்ற சாலைகளில் எப்படி காரை இயக்குகிறார்களோ அதே போல் இந்த பாதையிலும் இயக்குகிறார்கள். மலையில் ஏறும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் விபத்து ஏற்படுகிறது.

வாகனத்தை முதல் கியரில் இயக்கும்போது மேலிருந்து கீழே வரும் போது 3 ஆவது கியரில் போகும் வேகத்திற்கு வாகனம் இழுத்து செல்லும். இதற்கு அந்த வாகனத்தை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரேக் வயர் சூடாகி பிரேக் பிடிக்காமல் போய்விடும். பிறகு எங்காவது மோதி 250 அடி ஆழத்திற்கு போய் வாகனத்தை சொருகிவிடும்.
இத்தனை ஆழத்தில் விழும் போது பலர் இறந்துவிடுகிறார்கள். அப்படியே உயிர் பிழைத்தாலும் அவர்களை மீட்க ஆட்கள் வராவிட்டால் பசி பட்டினி, பயம் காரணமாக இறந்துவிடுகிறார்கள். இது போல் ஒரு விபத்து நடந்தது என்பது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யாராவது பார்த்துவிட்டு வனத்துறைக்கோ போலீஸுக்கோ சொன்னால்தான் உண்டு. இல்லாவிட்டாலும் தெரியாது. இப்படி பல நாட்கள் கழித்து கூட அழுகிய நிலையில் உடல்களை மீட்டிருக்கிறார்கள் என அப்பகுதியினர் சொல்கிறார்கள். எனவே தெரியாத சாலையில் பயணித்தால் காசை பார்க்காமல் அந்த வழியை நன்கு தெரிந்த ஒருவரை டிரைவராக நியமித்து கொள்ள வேண்டும் என போலீஸார் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications