“உங்கப்பன் வீட்டு பஸ்ஸா?” பேருந்து நிற்காததால் கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு.. ஓட்டுநர் திமிர் பதில்
நீலகிரி: நிறுத்தத்தில் கை காட்டியும் பேருந்து நிற்காமல் சென்றது குறித்து கேள்வியெழுப்பிய பெண்ணை, “இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா?” என அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணிகள் அர்பணிப்புமிக்கது. ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு லட்சக்கணக்கான மக்களை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய பணி. அதிலும், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருக்கிறது. இருந்தாலும் ஊதியத்தை தாண்டி இந்த ஊழியர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். ஆனால், விதிவிலக்காக இந்த ஊழியர்களில் சிலரின் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை உண்டாக்கி வருகிறது.

அதாவது நீலகிரி-கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு செல்லும் பேருந்தை எதிர்பார்த்து இளம்பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் கை குழந்தையுடன் காத்திருந்திருக்கிறார். அந்த வழியாக TN43 N 0751 எண் கொண்ட அரசு பேருந்து வந்திருக்கிறது. இளம்பெண் கைகாட்டி அதை நிறுத்த முயன்றிருக்கிறார். ஆனால் பேருந்து நிற்கவில்லை. நீலகிரி போன்ற மலை பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குதான் பேருந்து கிடைக்கும். அதை தவறவிட்டுவிட்டால் அடுத்த பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் பேருந்தை தவறவிட்ட இளம்பெண், அடுத்த பேருந்தை பிடித்து பஸ் ஸ்டான்ட் வந்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். ஆனால் ஓட்டுநரோ, “இதென்ன உங்க அப்பன் வீட்ட பஸ்ஸா?” என்று நக்கலாக கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி-கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு சென்ற அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் குழந்தையுடன் காத்திருந்த பெண்மணி அவதி, இது குறித்து ஓட்டுனரிடம் அந்த பெண் கேட்டதற்கு கை காட்டினால் நிற்க "உன் அப்பன்" வீட்டு வண்டியா என்கிறார்.TN43 N 0751@Udhaystalin @sivasankar1ss pic.twitter.com/OWnLYeiro4
— Srini Subramaniyam (@Srinietv2) January 6, 2024
ஏற்கெனவே தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து பலவீனமாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. “போதிய அளவுக்கு ஊழியர்கள் கிடையாது, பேருந்துகள் கிடையாது, பழுதடைந்த பேருந்துகளை இயக்க சொல்லி போக்குவரத்து கழக நிர்வாகம் நிர்பந்திக்கிறது, இதில் டீசல் வேறு மிச்சப்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் நெருக்கடி கொடுக்கின்றன” என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இவை அனைத்தும்,சரியான நேரத்திற்கு பஸ் கிடைக்காதது, தனியார் போக்குவரத்துடன் போட்டி போட முடியாத நிலை, விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என பொதுமக்கள் தலையில்தான் வந்து வெடிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்கிறது எனில், மறுபுறம் போக்குவரத்து ஊழியர்கள் சிலரின் செயல்பாடுகள் முகம் சுளிக்க வைக்கிறது. எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும், பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். அதேபோல பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications