எங்கே அவள்... என்றே மனம்.. இறந்து போன பெண் கரடியை தேடி அலையும் ஒத்த கரடி!
கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Recommended Video
ஊட்டி: நடுரோட்டில் கரடியை பார்த்ததும் பொதுமக்கள் நடுங்கி போய்விட்டனர். திடீரென அந்த கரடிகள் செடிகளுக்குள் ஒளிந்து கொள்கிறது. திடீரென சாலையின் நடுவே சோகமாக வந்து உட்கார்ந்து கொள்கிறது.. இந்த ஒரே ஒரு கரடியை பார்த்து மாவட்ட மக்கள் நடுங்கி போய் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். அதனால் இங்கு யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறையவே வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் இவைகள் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.
நேற்று மஞ்சூர், குன்னூர் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் வண்டிகளில் போய் கொண்டிருந்தனர். அப்போதுதான் திடீரென அந்த கரடி வந்துவிட்டது. கரடியை பார்த்ததும் ஆர்வத்துடன் மக்கள் போட்டோ எடுத்தனர். ஆனால் கரடி எல்லோரையுமே நடுரோட்டில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்துவிட்டது. குறுக்கும் நெடுக்கும் சர்வசாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்தது.
அதற்கு பிறகுதான் மக்களுக்கு பீதியே கிளம்பியது. தொலைதூரத்தில் வண்டியிலேயே உட்கார்ந்து பொறுமையோடு காத்திருந்து பின்னர் கிளம்பி சென்றனர். வெளிநாட்டு பயணிகள் ரசித்து இதனை பார்த்து விட்டு போய்விடுகின்றனர். ஆனால் உள்ளூர்க்காரர்களுக்கு இது பயத்தை ஏற்படுத்தி உள்ளதால், இந்த ஒத்த கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிறகுதான் விஷயம் புரிந்தது.. குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தில் 3 கரடிகள் நடமாடி வந்திருக்கின்றன. இதில் 7 வயதுள்ள ஒரு பெண் கரடி போன 6-ம் தேதி சோகத்தொரை சாலையில் தேயிலை தோட்டம் அருகே இறந்து கிடந்தது. இதனால் மற்ற 2 கரடிகளில், ஒரு கரடி இறந்துபோன கரடியை தேடி கடந்த 2 நாட்களாக பழத்தோட்டம் சோகத்தொரை சாலையில் சுற்றித்திரிந்து வருகிறதாம்!