சிலை திறந்த ஸ்டாலின்.. ஊட்டிக்கும் இந்த இங்கிலாந்து காரருக்கும் என்ன சம்பந்தம்? - யார் இந்த ஜான்?
நீலகிரி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார்.
Recommended Video
200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரத்தை நிர்மாணித்த இந்த பிரிட்டிஷ் அதிகாரியை கௌரவிக்கும் விதமாகவே அவருக்கு ஊட்டியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் ஏரியை உருவாக்கி, ஐரோப்பிய நாடுகளில் இருந்து செடிகள், பழ மரங்களை கொண்டு வந்து நட்டு இன்றைய ரம்மியமான ஊட்டியை கட்டமைத்த பெருமைக்கு உரியவர் ஜான் சல்லிவன்.

ஊட்டியை உருவாக்கியவர்
ஜான் சல்லிவன், நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் பணியாற்றியவர். அந்த காலகட்டத்தில்தான் ஊட்டி நகரத்தையே நிர்மாணித்தார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரத்தை கட்டமைத்த ஜான் சல்லிவனை நினைவுகூரும் வகையில் சிலை அமைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தான் அவருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

ஜான் சல்லிவன்
ஜான் சல்லிவன் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் 1788-ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஸ்டீபன் சல்லிவன், தஞ்சாவூரில் பிரிட்டிஷ் அரசின் அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் முயற்சியால் தஞ்சாவூர் மற்றும் அதனையொட்டி உள்ள இடங்களில் பல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
ஜான் சல்லிவன் 15 வயதில் சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தவர். 1806-ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807-ஆம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை செயலாளரின் உதவியாளராகவும், 1809-ஆம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளராகவும் பணியாற்றினார்.

கோவை கலெக்டர்
ஜான் சல்லிவன் 1814-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815ஆம் ஆண்டு கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் 1815 முதல் 1830 வரை கோவை மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்தார். இவர்தான் 1819ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தைக் கண்டுபிடித்தார்.
இயற்கை சூழலில் விருப்பம் கொண்ட ஜான் சல்லிவன் 1819-ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசூட் லூயிஸ் மற்றும் படுகர் பழங்குடியினரின் வழிகாட்டுதலுடன் ஊட்டி பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வாரங்கள் அப்பகுதியைச் சுற்றிப்பார்த்த அவர் அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டியுள்ளார்.

கோடை வாசஸ்தலம்
நீலகிரியின் முதல் கட்டடமான இந்தக் கல்வீடு இன்றும் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் உள்ளது. அதன்பிறகு இப்பகுதியை கோடை கால வாசஸ்தலமாக மாற்ற எண்ணி, இந்தப் பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார் ஜான் சல்லிவன்.
பின்னர், ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டு, அழகான நகரத்தையே உருவாக்கினார்.

ஏரியை உருவாக்கிய சல்லிவன்
ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் உருவாக்கினார் சல்லிவன். மேலும், மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தையும் உறுதி செய்தார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜான் சல்லிவன் 1841-ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும்பி அங்கு தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 1855-ஆம் ஆண்டு தனது 66-ஆம் வயதில் இங்கிலாந்தில் உயிரிழந்தார். ஊட்டியை நிர்மாணித்த அவரது பெருமையைப் போற்றும் வகையில் ஊட்டியில் இன்று அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications