நீலகிரியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.. கதவை பூட்டிய பொதுமக்கள்! நூலிழையில் உயிர் தப்பிய நபர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது. இந்த சிறுத்தையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய நபர், சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேமுண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தங்கசிவன். இவர் காபி தோட்டத்துக்கு நடுவே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் வீட்டை பூட்டிவிட்டு எல்லைமலை பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று தங்கசிவன் வீட்டுக்குள் இருந்து தண்ணீர் குடம் எடுக்க இடும்பன் என்பவர் சென்றார். அப்போது அந்த வீட்டுக்கள் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அவர் வனவிலங்கு வீட்டுக்குள் நுழைந்து இருக்கலாம் என சந்தேகித்தார்.
இதனால் எச்சரிக்கையாக அவர் வீட்டுக்குள் சென்றார். அப்போ அவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதாவது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று அங்கும் இங்கும் உலாவியது. அந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் பயந்துபோன இடும்பன் வேகமாக வீட்டை விட்டு ஓடிவந்தார்.
அதோடு சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டினார். மேலும் சம்பவம் குறித்து உடனடியாக அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதேபோல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை பிடிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்டமாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தைக்கு மயக்கஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை டாக்டர் அங்கு விரைந்துள்ளார். இந்த சம்பவம் சேமுண்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications