ஊட்டியில் இருந்தே வேலையை ஆரம்பித்த முதல்வர் ஸ்டாலின்.. “6 பேர் விடுதலை” சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை!
நீலகிரி: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து காணொளி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மற்ற 6 பேர் விடுதலை தொடர்பான முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

பேரறிவாளன் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. தமிழக ஆளுநர் சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தாத நிலையில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை தாங்கள் விடுவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பேரறிவாளனின் 31 ஆண்டுகால சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

மற்ற 6 பேரும்
பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள விடுதலை மூலம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகிய 6 பேருக்கும் விடுதலை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு முன்னுதாரணமாக கொள்ளப்பட்டு மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைக்கும் என தமிழக அரசின் வழக்கறிஞர் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுதலையின் மூலம், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகிய மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த முழு விவரம் கிடைத்தவுடன், மற்ற 6 பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்ப்பு வந்த அன்றே தெரிவித்திருந்தார். அன்று மாலையே அவர் கோவை கிளம்பிச் சென்றார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார்.

ஊட்டில் இருந்தபடியே
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து காணொளி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications