நான் பார்த்த முதல் முகம் நீ.. நான் வாழ்ந்த முதல் அறை நீ.. அம்மா! மனம் கரைந்து அழுத நீலகிரி ஆட்சியர்
ஊட்டி: தாயின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடலுக்கு ஆதரவற்ற முதியவர்கள் நடனம் ஆடியதை கண்ட நீலகிரி ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் பகுதியில் 100 வயதை கடந்த முதியவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அந்த முதியவர்களுக்கு ஆட்சியர் அருணாவும் பொன்னாடை அணிவித்து அவர்களுக்கு தேவையான கம்பளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் என்ற பாடலுக்கு அங்கிருந்த முதியவர்கள் நடமாடினர்.
பிறகு நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ, நான் வாழ்ந்த முதல் அறை நீ, நான் வரைந்த முதல் படம் நீ.. அம்மா என் முகவரி நீ அம்மா என்ற நடிகர் அஜித் நடித்த வலிமையில் வரும் பாடலுக்கும் முதியவர்கள் நடன அசைவுகளை செய்தனர். அப்போது ஒரு கட்டத்தில் உணர்ச்சிவயப்பட்ட அருணா கண்ணீர் விட்டார்.

அவரை அங்கிருந்த முதியவர்கள் ஆசுவாசப்படுத்தினர். அங்கிருந்த பலகையில் முதுமை என்பது சுமையல்ல, அது மனிதனின் மற்றொரு குழந்தை பருவம் என எழுதப்பட்டிருந்தது. இத்தனை பெரிதும் மதிக்கப்படும் தாய், தந்தையை சிலர் ஆதரவற்ற இல்லங்களில் சேர்த்து தாய்மையையே கேள்விக்குறியாக்குகிறார்கள்.
ஆனாலும் அந்த தாயுள்ளங்கள் தங்களுக்கு துரோகம் இழைத்த குழந்தைகளை சபிக்காமல் வாழ்த்திக் கொண்டே இருக்கும். அதுதான் தாய்மை. முதியவர்கள் இருந்தாலே அவர்கள் சுமை என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தையின் மற்றொரு வடிவம் என்பது பலருக்கு புரிவதில்லை. வயது ஆக ஆக குழந்தை போல் மாறிவிடுகிறார்கள்.

தன் வயிற்றை பட்டினி போட்டு என்னை கரை சேர்த்தவளே என ராஜ்கிரண் நடித்த படத்தில் ஒரு பாடலில் ஒரு வரி வரும். அதற்கேற்ப தாய், தந்தை கால் வயிற்று கஞ்சியை குடித்துவிட்டு மீதியுள்ளதை குழந்தைகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட தாய்மையை போற்றாமல் அவர்களை நட்டாற்றில் நிறுத்தும் பிள்ளைகளை என்னவென சொல்வது?












Click it and Unblock the Notifications