எங்களை மன்னிச்சிடுங்க.. கண்ணீரை துடைத்து கட்டியணைத்து வழி அனுப்பிய நீலகிரி கலெக்டர்
ஊட்டி: எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, சிறுத்தைக்கு 3 வயது மகளை பலி கொடுத்த தாயின் கண்ணீரைத் துடைத்தும் கட்டியணைத்தும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு வழியனுப்பி வைத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒற்றை சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தியபடி உலாவி வந்தது. அடுத்தடுடுத்து 4 பேரை கடித்தது. சரிதா என்ற பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே பந்தலூர் அருகே உள்ள தொண்டியாளம் பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் கடந்த 5 மற்றும் 6ம் தேதி வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். அப்போது திடீரென பெண்கள் அலறினார்கள். உடனே சத்தம் வந்த திசைக்கு வனத்துறையினர் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள், தேயிலை செடிகளுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியை கவ்வி இழுத்து சென்று விட்டதாக தெரிவித்தனர்.
உடனே வனத்துறையினர் தேயிலை செடிகளை விலக்கி தேடியபோது அங்கு கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அவளை தோளில் தூக்கிக்கொண்டு, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே தேவாலா போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர்.

அதில் அந்த சிறுமி, மேங்கோரேஞ்ச் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் கர்வா, மிலாந்தி தேவி தம்பதியின் மகள் நான்சி(வயது 3) என விசாரணையில் தெரியவந்தது.மேலும் சிறுமி நான்சி, தொண்டியாளம் அங்கன்வாடி மையத்தின் முன்பு சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தபோது, அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து சிறுத்தை பாய்ந்து வந்து, அவளை கவ்விச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்ததால் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதர்களை கடிக்கும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அதிகாரிகள் பந்தலூர் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு தமிழகம் மற்றும் கேரள மாநில கால்நடை டாக்டர்கள், வனத்துறை ஊழியர்கள் கொண்ட குழுவினர் தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த 4 வயது உடைய ஆண் சிறுத்தையை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் பிடிக்கப்பட்ட சிறுத்தையை பாதுகாப்பாக ஒரு கூண்டில் அடைத்து அதனை மினிலாரியில் ஏற்றி டாக்டர்கள், வனத்துறை ஊழியர்கள் கொண்ட குழுவினர் நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர்கள் பிடிப்பட்ட சிறுத்தைக்கு ஏதாவது நோய் தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்தார்கள். பின்னர் ஆக்ரோஷமாக இருந்த சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள தனி கூண்டில் ஊழியர்கள் அடைத்தனர். கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தையை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் 3 வயது மகளை பறிகொடுத்த மேங்கோரேஞ்ச் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் கர்வா, மிலாந்தி தேவி தம்பதியை நேரில் சந்தித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் கண்ணீரைத் துடைத்தும் கட்டியணைத்தும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு வழியனுப்பி வைத்திருக்கிறார் கலெக்டர் அருணா. அவர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், "நீலகிரி மாவட்டத்தில், சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி நான்சியின் உடல் விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நீலகிரி மாவட்டம், கூடலூரில் 06.01.2024 அன்று சிவக்குமார் என்பவரது 3 1/2 வயது நான்சி என்கிற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்க களை சாலை மார்க்கமாக அனுப்பினால் கிட்டத்தட்ட சொந்த ஊர் சென்றடைய 3 நாட்கள் ஆகும்.
இதனை கருத்திற்கொண்டு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களின் ஏற்பாட்டில் விமான பயணசீட்டு பெற்று, விமானத்தின் மூலம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெடுந்தூர பயணம் என்பதால் சிறுமியின் உடலை உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு, கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராஞ்சியிலிருந்து அவரது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக ராஞ்சி மாவட்ட ஆட்சியரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 07.01.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுமி நான்சியின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து, நேற்றைய தினம் (07.01.2024) சிறுமியின் பெற்றோர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இறுதியில், சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சிறுமியின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications