நிற்காமல் பெய்யும் மழை - நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மீறினால்.. ஆட்சியர் எச்சரிக்கை
நீலகிரி: மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் மேற்கும் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும். தென்காசி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

அடுத்த 3 நாட்கள்
நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்டு 5 முதல் 7 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று
நீலகிரி, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்." என்று தெரிவித்து உள்ளது.

விடுமுறை அறிவிப்பு
நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், உத்தரவை மீறி பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications