ஓணம் பண்டிகை.. திருவோணம் வந்தல்லோ.. நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்
நீலகிரி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய பொருட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. அத்தப்பூ கோலம் போட்டு விளக்கேற்றி நடனமாடி தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்கு மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.

அஸ்வினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இரு நட்சத்திரங்களுக்குத்தான் 'திரு' என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம். மார்கழியில் இந்த நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இன்னொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.
ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் 29ஆம் தேதியன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய பொருட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications