குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் குஷி
ஊட்டி: குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் விதமாக ஊட்டி-குன்னூர், ஊட்டி-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான ரயில் ஆகும்.
இந்த ரயிலில் ஏறி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த படி பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். இந்த ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது மிகமிக கடினமாகும். இதனால் பலர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும் அத்துடன் ஏப்ரல் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் மலை ரெயிலில் பயணிக்க ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா ஊடரங்கு காரணமாக மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில் பல்வேறு தளர்வு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் மெல்ல மெல்ல ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. தற்போது ஊட்டியில் சுற்றுலா தொழில் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது. இதையடுத்து நாளை (10.10.2020) முதல் குன்னூர்-ஊட்டி இடையே மீண்டும் மலை ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குகைகளை கடந்து செல்லும் ரெயிலில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசையும் இருப்பவர்களுக்காக ஊட்டி மலை ரெயில் நாளை முதல் ஓடப்போகிறது.












Click it and Unblock the Notifications