நீலகிரியில் இன்று ரெட் அலர்ட்.. தயார் நிலையில் மீட்புக்குழு.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மிகக் கனமழை ரெட் அவர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வானிலை மையம் ரெட் அலர்ட்
நீலகிரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை மழை பெய்யும் என்பதால், நீலகிரி மாவட்டத்திற்கு இன்றுமுதல் ரெட் அலர்ட் விற்கப்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் தடுப்பு சுவர் உள்ள இடங்களில், வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் 2 குழுக்களாக 44 மீட்பு வீரர்கள் உதகை வந்தடைந்தனர். இவர்கள் இன்று கூடலூர் மற்றும் குந்தா பகுதிகளுக்கு இரண்டு குழுக்களாக சென்றுள்ளனர். இதனிடையே, மீட்புப் பணிகளுக்காக உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் கூடலூர் மற்றும் குந்தா பகுதிகளுக்கு தயார் நிலையில் சென்றுள்ளனர்.

தயார் நிலையில் மீட்பு குழுவினர்
தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கு, ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பேரிடர் மீட்பு உபகரணங்கள் கொண்டு, தீயணைப்பு வீரர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடரை சமாளிக்க தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இரண்டு குழுக்களாக பிரிந்து, மழை அதிகம் பெய்யக்கூடிய, குந்தா, கூடலுார் வட்டத்தில், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில், மழை பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள உள்ளூர் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், இதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications