20 நிமிடங்கள் “கட்” ஆன நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி.. நடந்தது என்ன? ஆஹா.. அங்கேயே இப்படியா?
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 88 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 38 நாட்கள் உள்ளன.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்ட ஸ்ட்ராங் ரூம் என்ற அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 163 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சனிக்கிழமை மாலை திடீரென சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. அரசியல் கட்சிகளின் முகவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறையில் சிசிடிவி கேமரா பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரையில் எந்தக் காட்சியும் ஒளிபரப்பாகாமல் துண்டிக்கப்பட்டதால் அரசியல் கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவை வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. அதீத வெப்பம் காரணமாக, சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் பெட்டி சூடாகி, செயலிழந்திருக்கக்கூடும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்தப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க அறையைக் குளிரூட்ட ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளிர் பகுதியான நீலகிரியிலேயே அதிக வெப்பம் காரணமாக ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சிகள் செயலிழந்துள்ளதால், மற்ற இடங்களிலும் இதுபோன்ற பிரச்சனை ஏற்படக் கூடும் என அரசியல் கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக கூட்டணி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமார் ஆகியோர் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications