20 நாட்களாக ஆட்டம் காட்டிய T23 ஆட்கொல்லி புலி.. மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்
நீலகிரி: மனிதர்களை வேட்டையாடி வந்த T-23 ஆட்கொல்லி புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை உயிருடன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் புலி ஒன்று 4 நபர்களையும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேடும் பணி தீவிரம்
T23 என அழைக்கப்படும் ஆட்கொல்லி புலி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த புலியை 2 வாரங்களுக்கு மேலாக வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், அதிரடிப் படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் ஆகியோர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மயமான புலி
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காலை அந்த புலியானது சிங்கார வனப்பகுதியில் தென்பட்டது. அதன் பிறகு திடீரென கடந்த சில நாட்களாக அந்த புலி மாயமானது. இதனால் எங்கு அந்தப் புலி உயிரிழந்திருக்குமோ என அஞ்சப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்த புலி திடீரென வனத்துறை சிசிடிவி கேமராவில் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவானது. இதையடுத்து தேடுதல் வேட்டை மீண்டும் தீவிரமானது.

மயக்கமருந்து
புலி நடமாட்டம் உள்ள அதே பகுதியில் நான்கு இடங்களில் மரத்தின் மீது பரன்களை அமைத்து அதன் மீது கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் கண்காணித்து வந்தனர். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ட்ரோன் கேமராவை கொண்டும் கண்காணிப்பு பணி நடைபெற்றது. இந்தச் சூழலில் T-23 புலிக்குக் கடலூர் மசினக்குடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது
மேலும், மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை உயிருடன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நள்ளிரவில் மசினகுடி - முதுமலை சாலையில் அந்த புலி சென்று கொண்டிருந்த போது கால்நடை மருத்துவக் குழு 4 முறை மயக்க ஊசியைச் செலுத்தியது. அதில், இரண்டு ஊசிகள் T23 புலியின் உடம்பில் ஏறியது. இதையடுத்து புலி வனப்பகுதிக்குள் ஓடியது. புலியைப் பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications