ஊட்டியில் மழை, மண்சரிவு.. உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ரத்து
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தண்டாவளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்று (செப்டம்பர் 30) ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக மலை ரயில் அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும்போது மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகை வரை நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.30 மணிக்கு உதகையைச் சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். இந்த மலை ரயிலில் பயணிக்க வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதால் கோடை சீசனில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் வருடந்தோறும் தென்மேற்குப் பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கும். செப்டம்பர் மாதம் வரை இந்த மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாகப் பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களின் இடையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மழை மற்றும் தண்டவாளங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்து வந்த நிலையில், நீலகிரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. குன்னூர் அருகே கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணாபுரம் பகுதியில் பெய்த மழையால் நேற்று இரவு 10:30 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு ஜெயலட்சுமி என்பவர் வீட்டின் மீது விழுந்தது.
பயங்கர சப்தம் கேட்டதையடுத்து ஆசிரியை ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது ஜெயலட்சுமி மீது மண் சரிவு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஜெயலட்சுமியை 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.












Click it and Unblock the Notifications