கூடலூரில் இரு புலிகள் கொல்லப்பட்ட சம்பவம்.. 3 பேர் கைது.. வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்
ஊட்டி: நீலகிரியில் இரண்டு புலிகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. புலிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று பேரை வனத் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப் பகுதியைக் கொண்ட இடமாகும். நீலகிரியைப் பொறுத்தவரை யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்களின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். உணவு, குடிநீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைவதும் வழக்கம். சமீபகாலமாக புலிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கூடலூருக்கு உள்பட்ட பிதர்க்காடு, சசக்ஸ் என்ற பகுதியில் தனியார் தோட்டத்தில் புலி குட்டி இறந்து கிடப்பதாக கடந்த 20-ம் தேதி வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வன அலுவலர் மற்றும் சரகர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த இடத்தில் 4 வயதுடைய ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புலிக் குட்டி உயிரிழந்து கிடந்த பகுதியில் இருந்து சுமார் 75 மீட்டர் தூரத்தில் எட்டு வயதான பெண் புலி ஒன்றும் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றி ஒன்றும் இறந்து கிடந்துள்ளது.
இறந்த காட்டுப் பன்றியின் உடல் அருகில் புலிகளின் கால் தடங்கள் இருந்துள்ளன. இறந்த புலிகளின் கால் தடங்களுடன் அந்தக் கால் தடங்களை வைத்து சரிபார்த்தபோது அவை ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்தது. காட்டுப் பன்றியின் உடலை முக்கால்வாசிக்கும் மேல் புலிகள் சாப்பிட்டுள்ளதாம். மேலும், இரண்டு புலிகளின் உடலில் காயங்களும் இருந்துள்ளன.
இதைத்தொடர்ந்து, இரண்டு புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்து, அதன் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன. பரிசோதனையில் இரண்டு புலிகளின் வயிற்றிலும் காட்டுப் பன்றியின் மாமிசம் இருந்துள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், புலிகளின் உறுப்புகளை சோதனை செய்ததில் விஷத்தால் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, காட்டுப் பன்றி விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டிருக்கலாம். அந்த காட்டுப் பன்றியை புலிகள் சாப்பிட்டதால் அவையும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதுகுறித்து, முதுமலை புலிகள் காப்பக கலை இயக்குநர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான வனத் துறையினர் சசக்ஸ் தோட்டத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, புலிகள் கொலையில் தொடர்புள்ள நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், உயிரிழந்த இரு புலிகள் மற்றும் காட்டுப் பன்றிகளின் ரசாயன ஆய்வறிக்கையில், கார்போஃப்யூரான் மற்றும் குளோர்பைரிபாஸ் விஷத்தால் புலிகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. காட்டுப் பன்றியின் குடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் விஷ ரசாயனங்கள் எதுவும் இல்லை. ஆனால், அவற்றின் தோல் திசுக்களில் அதிக அளவிலான கார்போஃப்யூரான், குளோர்பைரிஃபோஸ் நச்சு இருப்பது தெரியவந்துள்ளது.
இரண்டு புலிகளின் குடலிலும் காட்டுப்பன்றி இறைச்சி இருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நச்சுயியல் அறிக்கை, பிரேதப் பரிசோதனையில் புலியை கொல்வதற்காக, காட்டுப் பன்றியை விஷம் வைத்து கொன்று அதன் இறைச்சியை வைத்ததில் புலிகள் அதனை உண்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சசக்ஸ் எஸ்டேட்டில் சந்தேகத்தின்பேரில் மூவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் செல்போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்டிருந்த போட்டோக்கள், வீடியோககள் மீட்கப்பட்டுள்ளன. அதில், உயிரிழந்த காட்டுப் பன்றியின் படங்கள் இருந்துள்ளன. மேலும், அவர்களது செல்போன்கள் மூலம் அவர்கள் கடந்த காலங்களில் காட்டுப் பன்றி கொலை செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சூர்யநாத் பராக் (35), அமங்கோயலா (24), சுரேஷ் நன்வார் (25) ஆகிய மூன்று பேரை வனத் துறையினர் கைது செய்துள்ளனர். புலிகளின் தோல், நகம், பற்களுக்காக காட்டுப் பன்றிக்கு விஷம் கொடுத்து கொன்று அதன் இறைச்சியை புலிகளுக்கு கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மூவரிடமும் வாக்குமூலமும் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மூன்று பேரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications