வெளியே சாப்பாடு கிடைக்கலைங்க.. ஜாமீனை ரத்து பண்ணி சிறைக்கு அனுப்புங்க.. "கொடநாடு" வாளையார் மனோஜ் மனு
உதகமண்டலம்: உணவு, தங்கும் இடம் இல்லாததால் ஜாமீனை ரத்து செய்துவிட்டு தன்னை மீண்டும் சிறைக்கே அனுப்பிவிடுமாறு கொடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது.

கொள்ளை
பின்னர் பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிகிறது. இந்த பங்களாவுக்கு என்ன கொள்ளையடிக்கப்பட்டது, எப்படி கொள்ளையடிக்கப்பட்டது போன்ற விஷயங்கள் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கொலை, கொள்ளைகளுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

10 பேர் கைது
இந்த வழக்கில் கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வாளையார் மனோஜ் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

மனோஜ் மனுத்தாக்கல்
இந்த நிலையில் அவருக்கு கடந்த நவம்பர் மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர் உதகையில் தங்கியிருந்து வாரம்தோறும் திங்கள்கிழமை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு மனோஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உணவு
இதுகுறித்து அந்த மனுவில் அவர் கூறுகையில் தங்குவதற்கு இடமும் உணவும் கிடைக்கவில்லை என்பதால் தனது ஜாமீனை ரத்து செய்துவிட்டு சிறையில் அடைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உதகை மாவட்ட நீதிமன்றம் நாளை விசாரணையை நடத்தவிருக்கிறது.












Click it and Unblock the Notifications