அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்காலத் தடை.. சென்னை ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் அப்பீல்
சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ள மேல் முறையீட்டு வழக்கை நாளை மறுநாள் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறிவருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனக் கூறி, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனு குறித்து பன்னீர் செல்வம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் பன்னீர்செல்வம் தரப்பில் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி முறையிட்டார். மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால், மேல் முறையீட்டு வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications