42 வயது பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா.. 67 வயதாகும் மனைவி பிரிஜிட்டே நலம்?
பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று இருந்தபோதிலும், தமது பொறுப்புகளை அவர் ஆற்றுவார் என்று அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இந்த வாரம் தொடங்கி இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டது. ஏனெனில், பிரான்ஸில் இதுவரை 20 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

பிரான்ஸ் நிலவரம்
கொரோனா தொற்று தொடங்கியது முதல் அங்கு இதுவரை 59,400 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது அலை வீசும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. அதற்குள்ளாக 42 வயதாகும், எமானுவேல் மக்ரோன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் தடுப்பூசி அறிமுகம்
அதிபருக்கு கொரோனா உறுதியானதால், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், (55), தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் இன்று, வியாழக்கிழமை செனட்டில் அரசின் கோவிட் தடுப்பூசி கொள்கையை அறிமுகப்படுத்தவிருந்தார். ஆனால் செனட்டுக்கு போக முடியாது என்பதால், சுகாதாரத் துறை அமைச்சர் ஆலிவர் வாரன் அதற்கு பதிலாக கொரோனா தடுப்பூசி கொள்கையை அறிமுகம் செய்து பேசுவார்.

67 வயது மனைவி
காஸ்டெக்ஸ் உடலில் எந்த அறிகுறிகளும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அதிபர் மக்ரோனின் 67 வயதான மனைவி பிரிஜிட்டேவுக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பது பற்றி அதிபர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

மகளின் வகுப்பு தோழனை மணந்த டீச்சர்
பிரிஜிட்டே, தனது 40 வயதில், (1993ஆம் ஆண்டில்) லா பிராவிடன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 15 வயதான இம்மானுவேல் மக்ரோனை முதன் முதலில், சந்தித்தார். அங்கு அவர் ஆசிரியராக பணியாற்றியபோதுதான் இந்த சந்திப்பு நடந்தது. மக்ரோன் ஒரு மாணவர் மட்டுமல்ல, பிரிஜிட்டே மகள் லாரன்ஸின் வகுப்புத் தோழராகும். அப்போதே பிரிஜிட்டேவுக்கு மக்ரோன் மீது காதலாம். 2006ம் ஆண்டு ஜனவரியில் விவாகரத்து செய்த பிரிஜிட்டே 2007ல் மக்ரோனை மணந்தார். இதுதான் அந்த பிளாஷ் பேக்.

உலக தலைவர்கள்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பல உலகத் தலைவர்களில் மக்ரோனும் ஒருவராகியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அக்டோபரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மூன்று நாட்கள் மருத்துவமனையில் செலவிட்டார். இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications