உக்ரைன் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்.. ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் பிரான்ஸ் அதிபர்! பின்னணி
பாரீஸ்: உக்ரைன் எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முக்கிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவ வீரர்களைக் குவித்து வருகிறது. இதனால் உக்ரைன் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என்றும் இதற்கான நடவடிக்கைகளில் தான் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாகவும் மேற்குலக நாடுகள் தொடர்ந்து சாடி வருகின்றனர்.

உக்ரைன் பதற்றம்
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் உக்ரைன் நாட்டுத் தூதரகத்தில் உள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்களைத் திரும்ப அழைத்துள்ளது. மேலும், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா கூடுதலாக 3000 வீரர்களையும் அனுப்பியுள்ளது. இதையெல்லாம் தாண்டியும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்க உள்ளதாக பல்வேறு மேற்கு நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.

திடீர் பயணம்
இந்தச் சூழலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா உடனான மோதலைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி இம்மானுவேல் மக்ரோன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelensky) உக்ரைன் தலைநகர் கியேவில் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை
உக்ரைன் எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழியை ஆராயவே பேச்சுவார்த்தையில் முன்னுரிமை அளிக்கப்படும் என மக்ரோன் கூறினார். மேலும், தென் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் தற்போது உள்ள பதற்றமான நிலையைத் தணிக்கும் ஒரு முயற்சியாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தனித்தனியாக தொலைப்பேசி வழியே உரையாடினார் என்றும் பிரான்ஸ் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா குற்றச்சாட்டு
ஐரோப்பாவின் நலன் குறித்தும் மற்றும் அங்குப் பதற்றத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மக்ரோன் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் விளக்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யாவின் முயற்சியே இது என்று அமெரிக்கா சாடியுள்ளது. இதற்காக ரஷ்யா பல சாக்குப்போக்குகளை கூறி வருவதாகவும் கிரிமியா ஆக்கிரமிப்பின் போது வெளியிடப்பட்டதைப் போலப் போலி பிரசார வீடியோக்களையும் ரஷ்யா வெளியிடத் தொடங்கியுள்ளதாகச் சாடியுள்ளது.

புதின் பதிலடி
மறுபுறம் ரஷ்யா அதிபர் புதினின் விளக்கம் இதற்கு நேர்மாறாக உள்ளது. உக்ரைன் பாதுகாப்பு மீது அமெரிக்காவிற்கு அக்கறை இல்லை என்று சாடியுள்ள புதின் உக்ரைனை ஆயுதமாகப் பயன்படுத்தி ரஷ்யாவை ஒடுக்குவதே அமெரிக்காவின் திட்டம் எனச் சாடியுள்ளார். மேலும், உக்ரைன் நேட்டோவிடம் இணைந்துவிட்டால் ரஷ்யாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். இதுதவிர உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் விரைவில் உக்ரைன் விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications