நடுவானில் மோதிய இரு ரஃபேல் விமானங்கள்.. உறைய வைக்கும் விபத்து.. என்ன நடந்தது! திக்திக் தகவல்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான இரண்டு ரபேல் விமானங்கள் இன்று எதிர்பாராத விதமாக நடுவானில் மோதியுள்ளது. இந்த திடீர் விபத்தில் இரண்டு அதிகாரிகள் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மிகவும் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாக ரபேல் கருதப்படும் நிலையில், அவை விபத்தில் சிக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உலகில் அனைத்து ராணுவங்களும் தங்கள் படைகளில் வைத்துக் கொள்ள விரும்பும் மிக முக்கிய அதிநவீன போர் விமானங்களில் ஒன்றாக ரபேல் இருக்கிறது. இதில் இருக்கும் திறன்களும் பாதுகாப்பு அம்சங்களும் வேறு எந்தவொரு போர் விமானத்திலும் இல்லை.

விபத்து: பொதுவாகவே ரபேல் விமானங்களால் எந்தவொரு விபத்தும் ஏற்படாது. ஆனால், அரிதிலும் அரிய நிகழ்வாக இந்த ரபேல் விமானங்களே விபத்தில் சிக்கியுள்ளன. வடகிழக்கு பிரான்சில் இரண்டு ரபேல் விமானங்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு ரபேல் விமானத்தில் இருந்த பைலட் விபத்திற்கு சில நொடிகள் இருந்த போது விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.
ஆனால் இரண்டாவது விமானத்தில் இருந்த பயிற்சியாளரும் மாணவரும் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் இப்போது நடந்து வருகிறது. இந்த இரு ஜெட் விமானங்களும் அங்குள்ள செயிண்ட்-டிசியர் விமான தளத்திற்குச் சொந்தமானதாகும். முதலாம் விமானத்தில் இருந்த விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ரஃபேல் விமானங்கள்: இப்போது இருக்கும் மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாக ரஃபேல் கருதப்படுகிறது. எதிரி விமானங்களை வீழ்த்தவும் கடலில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கவும் இந்த ரபேல் விமானம் உதவுகிறது. மேலும், அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த ரபேல் விமானம், உளவு பார்க்கும் திறனையும் கொண்டதாக இருக்கிறது.
மிகவும் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரபேல் போர் விமானங்கள், விபத்துக்குள்ளாவது அரிது. எனவே, இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
என்ன நடந்தது: இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், "பிற்பகல் 12:30 மணியளவில் பலத்த சத்தம் கேட்டது. போர் விமானம் அதிவேகத்தில் செல்லும் போது சத்தம் ஏற்படுவது வழக்கம். ஆனால், இது அதை எல்லாம் விட அதிக ஒலி கொண்டதாக இருந்தது. அதன் பின்னரே இரண்டு விமானங்கள் மோதியது தெரிய வந்தது" என்றார்.
வெகு சில விபத்துகள்: கடந்த 2007 டிசம்பர் மாதம் தென்மேற்கு பிரான்சில் நியூவிக் அருகே ரபேல் ஜெட் விபத்துக்குள்ளானது. அதுதான் ரபேல் விமானத்தின் முதல் விபத்தாகும். செப்டம்பர் 2009இல், இரண்டு ரபேல் விமானங்கள் வழக்கமான பயணத்தை முடித்துவிட்டு விமானம் தாங்கி கப்பலுக்குத் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியது. அதன் பிறகு பிரான்ஸில் நடக்கும் ரபேல் விமான விபத்து இதுவாகும்.
அதிநவீன இந்த போர் விமானங்களை பிரான்ஸ் அரசு இதுவரை எகிப்து, இந்தியா, கிரீஸ், இந்தோனேசியா, குரோஷியா, கத்தார் மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications