வேளாண் சட்டங்களை கண்டித்து... கவர்னர் மாளிகை நோக்கி பேரணி ... விவசாயிகள் மீது தடியடி!
பாட்னா: பிகார் தலைநகர் பாட்னாவில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் மூண்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பல்வேறு கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து ஆதரவு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல் வருகின்றன. இந்த நிலையில் பாட்னாவில் வேளாண் சட்டங்களை கண்டித்து ஆயிரக்கணக்கான விவசாசாயிகள், மாநில கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்னாவின் புகழ்பெற்ற காந்தி மைதானத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள் அங்கு இருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். டக் பங்களா சதுக்கம் அருகில் அவர்களை போலீசார் வழிமறித்து பேரணிக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே திடீரென மோதல் மூண்டது.
இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. கவர்னர் மாளிகை தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பதால் அங்கு செல்ல போராட்டக்கார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 34 நாட்களாக டெல்லியில் போராடி வரும் எங்கள் சக விவசாயிகளுக்காக நாங்கள் ஒற்றுமையுடன், அமைதியுடன் போராடுகிறோம். ஆனால் போலீசார் இதனை தடுக்கின்றனர் என்று பீகார் மாநில கிசான் சபாவின் பொதுச்செயலாளர் அசோக் பிரசாத் சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications