பீகாரில் ஓய்ந்தது பிரச்சாரம்..நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு! நவம்பர் 14ல் வாக்கு எண்ணிக்கை! பரபர களம்
பாட்னா: பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் முழுமையாக நிறைவடைந்தன. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தில், தேர்தல் ஆணையம் இதனை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்திருந்தது.
முதல் கட்டமாக கடந்த நவம்பர் 6-ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த நாளில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இப்போது இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தொகுதிகளில் மொத்தம் 1,302 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 136 பேர் பெண்கள் ஆவர். வாக்குப்பதிவு நடைபெறும் 20 மாவட்டங்களில் 3.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.95 கோடி ஆண்கள், 1.74 கோடி பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 943 பேர் அடங்குவர்.
பீகார் தேர்தல்
மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சில மிகப் பாதுக்காப்பு அவசியம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கியுடன் கூடிய துணை ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நேபாள எல்லை வழியாக சட்டவிரோத நுழைவுகளைத் தடுக்கும் வகையில் எல்லை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதலமைச்சர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தியனர். அதேபோல் மெகா கூட்டணியின் சார்பில் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
என்டிஏ கூட்டணி
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, இதே 122 தொகுதிகளில் பாஜக 42 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களையும் கைப்பற்றியது. அதேசமயம் ஆர்.ஜே.டி 33 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த முறை அந்த வெற்றித் தொகுதிகளை தக்க வைத்துக்கொண்டு கூடுதல் இடங்களைப் பெறும் நோக்கில் இரு கூட்டணிகளும் கடும் பிரச்சாரம் செய்துள்ளன.
நேபாள எல்லை பாதுகாப்பு
பிஹாரின் சீமாஞ்சல் பகுதியில் சுமார் 17 சதவீத மக்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாக்குகளை ஈர்க்கும் முயற்சியில் மெகா கூட்டணியும், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஏழு மாவட்டங்கள் நேபாள எல்லையுடன் இணைந்துள்ளன. இதனால் 726 கிலோமீட்டர் எல்லை முழுவதும் மூடப்பட்டுள்ளது. மாநில போலீஸ், துணை ராணுவம் மற்றும் ஊர்க்காவல் படை உள்ளிட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பீகார் மாநில டிஜிபி வினய் குமார் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
பாட்னாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து 122 தொகுதிகளின் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் நேரடியாக கண்காணிக்கப்படவுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவில் சேகரிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் தத்தம் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications