பீகார் தேர்தல்: பி.கே. ஆலோசனையில்தான் பாஸ்வான் மகன் குடைச்சல் கொடுக்கிறாரோ? ஜேடியூ சந்தேகம்!
பாட்னா: தேர்தல் வியூக வல்லுநரும் மாஜி கட்சியின் துணைத் தலைவருமான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில்தான் சிராக் பாஸ்வான், பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் பெரும்தலைவலியாக உருவெடுத்திருக்கிறாரோ என சந்தேகப்படுகிறது ஜேடியூ.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விசித்திரமான நிலைப்பாட்டை கையில் எடுத்திருக்கிறது. ஆளும் ஜேடியூவை கூட்டணியில் வைத்திருக்கிறது. அதனுடன் தொகுதிப் பங்கீடும் செய்து கொண்டு ஜேடியூவின் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
கொரோனாவுக்கு பிறகு நடக்கும் முக்கிய தேர்தல்.. பீகார் தேர்தலில் இரட்டிப்பு செலவு!.. பரபரக்கும் களம்!
ஜேடியூ அதிருப்தி
இன்னொரு பக்கம் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானில் லோக்ஜனசக்தியோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறோம்; ஆனால் ஜேடியூவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவோம் என்கிறது. லோக் ஜனசக்தியின் இந்த துடுக்குத்தனத்தால் கடுப்பாகிப் போன ஜேடியூ, அந்த கட்சியுடனான உறவை பாஜக முறிக்க வலியுறுத்துகிறது.
வேடிக்கை பார்க்கும் பாஜக
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ அத்தனையையும் அமுங்கினியாக நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜேடியூ 122; பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜகவைப் பொறுத்தவரையில் தம்மைவிட ஜேடியூ அதிக இடங்களில் ஜெயித்துவிடக் கூடாது; அப்படி வென்றால் அந்த கட்சியின் ஆட்டங்களுக்கு ஆடவேண்டும் என கவலைப்படுகிறது.
ஜேடியூவுக்கு நெருக்கடி
ஜேடியூவின் வெற்றியை குழிபறிக்கும் வகையில் லோக் ஜனசக்தி களமிறங்கி இருக்கிறது. அதுவும் ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்திருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஸ்வான் கட்சிக்கு அனுதாப அலைகள் கிடைக்கும். அப்படி கிடைத்தால் பாஜக நினைப்பதைப் போல, ஜேடியூவால் அதிக இடங்களில் வெல்ல முடியாமல் போகும்.
பிகேதான் காரணமா?
இப்படி கூட்டணிக்குள் குடைச்சல் பேர்வழியாக பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் உருவெடுத்திருப்பதற்கு காரணமே தங்களது கட்சியின் மாஜி துணை தலைவரான தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர்தான் என சந்தேகிக்கிறது ஜேடியூ. ஜேடியூவில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் தாம், சிராக் பாஸ்வானை எப்போதோ சந்தித்தேன்.. இப்போது தொடர்பே இல்லை என சத்தியம் அடித்து சொல்கிறார்.
ஜேடியூ குமுறல்
ஆனால் நாட்டின் அத்தனை மாநில தேர்தல் களத்திலும் கால்வைக்கும் பிரசாந்த் கிஷோர் சொந்த மாநிலத் தேர்தலுக்கு சும்மா இருப்பாரா? அதுவும் தம்மை தூக்கி கடாசிய ஜேடியூவுக்கு எதிராக வியூகம் வகுக்காமல் இருப்பாரா? தொலைதூரத்தில் இருந்து சிராக் பாஸ்வானை ஆட்டுவிக்கிறார் பிரசாந்த் கிஷோர் என்பதுதான் ஜேடியூ தலைவர்களின் மிகப் பெரும் குமுறலாக இருக்கிறது.