துணை ஜனாதிபதியாகும் நிதிஷ் குமார்? பாஜக தலைவர்கள் விருப்பம்.. பின்னணியில் பீகார் முதல்வர் பதவி
பாட்னா: உடல்நல பிரச்சனையை காரணம் காட்டி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த ஜனாதிபதி யார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இந்நிலையில் தான் நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய ராஜ்யசபா தலைவராக இருக்கும் நம் நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார்.

தனது உடல்நலனை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெகதீப் தன்கரின் துணை ஜனாதிபதி பொறுப்பு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தான் துணை ஜனாதிபதி தேர்தலில் நிதிஷ் குமாரை வேட்பாளராக்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பாஜக தலைவர்களே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாகூர் பசோல் (பிஸ்ஃபி சட்டசபை தொகுதி) கூறுகையில், ‛‛நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாக ஆக்கப்படுவதை விட சிறந்தது என்ன இருக்க முடியும்? நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியானாலும், இல்லாவிட்டாலும், அனைவரும் அதை விரும்புகிறார்கள்'' என்றார்.
அதேபோல் நிதிஷ் குமாருக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்குவது பற்றிய கேள்விக்கு பீகாரில் அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த நீரஜ் குமார் சிங் பப்லுவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ‛‛நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாவத நல்லது. அவர் துணை ஜனாதிபதியாவதில் எந்த தவறும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
பீகார் பாஜக தலைவர் நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது அவரை துணை ஜனாதிபதியாக்கவிட்டால் பீகாரில் முதல்வர் பதவியை பாஜக கைப்பற்றலாம் என்று கணக்கு போட்டு அவர்கள் இப்படி கூறி வருகின்றனர். ஏனென்றால் தற்போது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த கூட்டணிக்கு மொத்தம் 130 எம்எல்ஏக்கள் உள்ளனர். பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 124 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளன. எச்ஏஎம்(எஸ்) கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சைகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.
பாஜகவுக்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட நிதிஷ் குமாருக்காக முதல்வர் பதவியை அந்த கட்சி விட்டு கொடுத்துள்ளது. விரைவில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்கி விட்டால் பீகாரில் இந்த கூட்டணி வெல்லும் பட்சத்தில் முதல்வர் பதவியை பாஜகவால் கைப்பற்ற முடியும் என்பதால் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications