“ஹோலி அன்னைக்கு இஸ்லாமியர்கள் வீட்டுக்குள்ளேயே இருங்க..” பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!
பாட்னா: ஹோலி பண்டிகையன்று இஸ்லாமியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், இந்துக்கள் இந்த பண்டிகையை எந்தவித தடையும் இல்லாமல் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் மதுபனி மாவட்டத்தில் உள்ள பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவான ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது, "ஒரு வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. அதில் ஒரு வெள்ளியில் ஹோலி வருகிறது. எனவே ஹோலி பண்டிகையை இந்துக்கள் கொண்டாட இஸ்லாமியர்கள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது கலர் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது. இதுபோன்ற பிரச்சனை ஏதேனும் இருந்தால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கலாம். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம்.
ஆனால் இஸ்லாமியர்கள் இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள். ஒன்று அவர்கள் கலர் பொடி கடையை வைத்து கல்லா கட்டுகிறார்கள். மற்றொருபுறம் அவர்களின் உடை மீது கறை படிந்தால், நரகம் குறித்து பயப்பட தொடங்குகிறார்கள்" என்று பேசியிருக்கிறார். இவரது பேச்சு கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
பீகாரின் ஆர்ஜேடி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான இஸ்ரேல் மன்சூரி, "பண்டிகைகளால் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் எந்த பிரச்சனைகளும் ஏற்படுவது இல்லை. எங்கள் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் இந்துக்களும் பங்கேற்கின்றனர். ஆனால் பாஜக எம்எல்ஏ ஏன் ஹோலி பண்டிகையின்போது மட்டும் இஸ்லாமியர்கள் குறித்து கவலைக்கொள்கிறார்? இவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக வகுப்புவாத பிரச்சனைகளை தூண்டிவிடுகிறார்கள். சனாதன கொடியை ஏந்திக்கொண்டு நடிக்கிறார்கள்" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில், மாநில சிறுபான்மை விவகார அமைச்சரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான ஜமா கான், "ஹோலி பண்டிகையின்போது எந்த பிரச்சனையும் நடக்காது. மதநல்லிணக்கத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் வரும் 14ம் தேதி ஹோலியும், 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. ஆனால் 14ம் தேதி என்பது வெள்ளிக்கிழமை வருகிறது. ரம்ஜான் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இப்படி இருக்கையில்தான் பாஜக எம்எல்ஏவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications