பீகார் தேர்தல்.. அடித்து தூக்கும் தேஜஸ்வி யாதவ்.. சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பு.. விவரம்!
பாட்னா: பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், சி வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விருப்பமான முதல்வராக 36 சதவிகிதம் பேர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை தேர்வு செய்துள்ளனர். இதனால் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய 38 சதவிகிதம் பேர் வரை ஆதரவு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் பீகாரில் அத்தனை அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதேபோல் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மறுபக்கம் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தரப்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சி வோட்டர் தரப்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் மக்களிடையே யார் முதல்வராக வர வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ்க்கு சுமர் 36.2 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து புதிதாக அரசியலில் களமிறங்கி உள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு 23.2 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாருக்கு 15.9 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் சிராக் பாஸ்வானுக்கு 8.8 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பீகாரின் பிரச்சனைகளை எந்தக் கூட்டணியால் தீர்க்க முடியும் என்ற கேள்விக்கு 36.5 சதவிகிதம் பேர் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்டிஏ கூட்டணிக்கு 34.3 சதவிகிதம் பேரும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு 12.8 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைய 38.3 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சுமார் 40ன் சதவிகிதம் பேர் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் எனவும், சுமார் 36 சதவிகிதம் பேர் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, உடனடியாக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications