நிதிஷ் குமார் வேண்டவே வேண்டாம்.. பீகார் முதல்வர் ரேஸில் முந்திய தேஜஸ்வி - பிரசாந்த் கிஷோர் - C-Voter கருத்து கணிப்பு
பாட்னா: பீகார் முதல்வராக யார் வர வேண்டும் என்று சி வோட்டர் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் காங்கிரஸ் கூட்டணியின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பிரசாந்த் கிஷோரை மக்கள் முதல்வராக வர வேண்டும் என்று விரும்பும் நிலையில் இந்த லிஸ்ட்டில் பாஜக கூட்டணியின் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார்.
பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், அதன்பிறகு 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பிரசாரம் மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சி - வோட்டர் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதில் தற்போதைய பாஜக கூட்டணியின் முதல்வராக உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் பின்தங்கி உள்ளார். அவரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஜன்சுராஜ் கட்சியின் தலைவரான பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் முந்தி உள்ளார்.
இந்த கருத்து கணிப்பின்படி முதல்வராக தேஜஸ்வி யாதவ் வர வேண்டும் என்று 36.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பிரசாந்த் கிஷோர் முதல்வராக வர வேண்டும் என்று 23.2 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் 3வது இடத்தில் நிதிஷ் குமார் உள்ளார். அவர் முதல்வராக தொடர விரும்புவதாக 15.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதவிர பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு 8.8 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications